IPL 2022 | பெங்களூருவை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத்

IPL 2022 | பெங்களூருவை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத்
Updated on
2 min read

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ். நடப்பு சீசனில் அந்த அணிக்கு கிடைத்த எட்டாவது வெற்றி இது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். அந்த 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது குஜராத்.

அந்த அணிக்காக சாஹா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முக்கியமாக பவர் பிளேயில் அந்த அணி விக்கெட்டை இழக்கவில்லை. அதன் பிறகு சீரான இடைவெளியில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது குஜராத்.

குஜராத் அணியின் அந்த நெருக்கடி நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த தவறினர் பெங்களூரு பவுலர்கள். டேவிட் மில்லர் (39 ரன்கள்) மற்றும் ராகுல் தெவாட்டியா (43 ரன்கள்) 79 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது குஜராத். இருவரும் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர்.

நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குஜராத். அந்த அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

முன்னதாக, பெங்களூரு அணிக்காக பொறுப்புடன் விளையாடினர் விராட் கோலி மற்றும் ரஜத் பட்டிதார். அவர்களது அசத்தல் கூட்டணி காரணமாக குஜராத் அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி.

பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார் டூப்ளசி. தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. இருவரும் 99 ரன்களுக்கு விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாடினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர். இந்த அரைசதம் மூலம் கோலி தனது மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வந்துள்ளார். 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார் . 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார் கோலி.

பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். முதல் பந்து முதலே அதற்கான முனைப்பை காட்டியிருந்தார் மேக்ஸ்வெல். 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர். தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். லோம்ரோர் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது பெங்களூரு.

குஜராத் அணி சார்பில் பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ரஷீத் கான், ஃபெர்குசன் மற்றும் அல்சாரி ஜோசப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in