Published : 20 Feb 2022 06:48 PM
Last Updated : 20 Feb 2022 06:48 PM

வங்கி கணக்கால் வாழ்நாள் தடை வரை சென்ற பிரச்சனை - பால்க்னர் விவகாரத்தில் என்ன நடந்தது?

லாகூர்: பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்வது ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பால்க்னரின் குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளை போல பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல்லின் அதே பார்மெட்டை போல, பாகிஸ்தான் வீரர்களுடன் சர்வதேச வீரர்களும் கலந்துகொண்டு விளையாடுவார்கள். கடந்த பல சீசன்களாக நல்ல வரவேற்புடன் தொடர் நடந்துவருகிறது. நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவந்தார். கடந்த இரண்டு போட்டிகளாக அந்த அணிக்காக களமிறங்காத பால்க்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து டுவீட் செய்தார்.

தனது பதிவில், "பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, ஒப்பந்தத்தின்படி எனக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் கொடுக்கவில்லை. எனது ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரீமியர் லீக் நிர்வாகம் மதிக்காததால் கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து நான் வெளியேற வேண்டி இருந்தது. இந்த சீசன் முழுவதுமே நான் இங்கு தான் இருந்தேன். ஆனால் என்னிடம் பணம் தருவதாக அவர்கள் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் உறவை மேம்படுத்த விரும்பிய எனக்கு, இங்கிருந்து வெளியேறுவது வேதனை அளிக்கிறது.

ஏனெனில் பாகிஸ்தானில் பல இளம் திறமையாளர்கள் உள்ளனர். இங்குள்ள ரசிகர்கள் மிக ஆச்சரியப்படும் வகையில் அன்பு செலுத்துகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை அவமானகரமாக நடத்தியது. என்னுடைய நிலைப்பாட்டை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டார். இது சர்ச்சைக்கு வித்திட்டது. சர்வதேச வீரர்களுக்கு ஒப்பந்தத்தின்படி ஊதியம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

சில மணிநேரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "டிசம்பர் 2021ல் பால்க்னரின் ஏஜென்ட் ஊதியம் பெறுவதற்காக லண்டனில் உள்ள வங்கி கணக்கு ஒன்றை கொடுத்தார். அந்த கணக்கில் தொடருக்கான 70% ஊதியம் செலுத்தப்பட்டது. ஆனால் ஜனவரி 2022ல் அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லி கூறினர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் முடிந்த 40 நாட்களுக்குப் பிறகே மீதமுள்ள 30 சதவீதம் செலுத்தப்படும். இது அவரின் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் லண்டன் வங்கி கணக்கில் மாற்றிய 70% ஊதியத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தனது கணக்கில் இரண்டாவது முறையாக செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். இதன் பொருள் பால்க்னர் இரண்டு முறை ஊதியம் கேட்கிறார் என்பது தான். வெள்ளிக்கிழமை இதே கோரிக்கையை சொல்லி போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்தார். ஒரு பொறுப்பான அமைப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பால்க்னருடன் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்த உரையாடலில் கண்டித்தக்க வகையில் அவமானகரமான நடத்தையை பால்க்னர் வெளிப்படுத்திய போதிலும், பிசிபி அவரின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தியது. சமாதானத்தை ஏற்காமல், தொடரில் இருந்து வெளியேறியதுடன் பயண ஏற்பாடுகளை உடனடியாக செய்ய கேட்டுக்கொண்டார். சனிக்கிழமை காலை புறப்படும் முன் பால்க்னர் ஹோட்டலில் தவறான முறையில் நடந்துகொண்டதோடு ஹோட்டல் சொத்துக்களுக்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்தார். அவரின் இந்த நடத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகியவற்றுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சியாக கருதி, எதிர்காலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் விளையாடாத வகையில் வாழ்நாள் தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

லண்டன் வங்கியில் செலுத்திய பணத்தை எடுக்க முடியாததால் இந்த பிரச்னை நடந்துள்ளது. எனினும், பால்க்னரின் நடவடிக்கையை பாகிஸ்தானின் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். தொடர்ந்து தனது பேட் மற்றும் ஹெல்மெட்டை கொண்டு ஹோட்டல் பொருட்களை சேதப்படுத்திய விவகாரத்தில் பால்க்னர் மீது பாகிஸ்தான் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x