Published : 29 Sep 2021 03:59 PM
Last Updated : 29 Sep 2021 03:59 PM

நான் சமாதானத் தூதன்: அஸ்வின் - மோர்கன் மோதல் குறித்த உண்மை என்ன?- தினேஷ் கார்த்திக்  விளக்கம்

மோர்கன், அஸ்வின் இடையே நடந்த மோதலின்போது சமாதானத் தூதர் போலத்தான் செயல்பட்டேன் என்று கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி, 10 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.

பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும்.

டிம் சவுதி வீசிய 20 ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி ஏதோ கூறினார். அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

மோர்கன், அஸ்வின் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து தினேஷ் கார்த்திக், போட்டி முடிந்தபின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ராகுல் திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிந்தபோது அது ரிஷப் பந்த் உடலில் பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்த அஸ்வின், 2-வது ரன்னுக்கு ரிஷப் பந்த்தை அழைத்து ஓடினார்.

ஒரு வீரர் உடலில் பந்துபட்டுவிட்டால், அடுத்த ரன் ஓடக்கூடாது என்று கிரிக்கெட்டில் எழுதப்படாத மரபு. கிரிக்கெட்டின் தார்மீகப்படி ஓடமாட்டார்கள். ஆனால், அஸ்வின் 2-வது ரன் ஓடியதை மோர்கன் வரவேற்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இது கிரிக்கெட் விதிகளில் கூறப்படவில்லை என்றாலும், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி விவாதித்தால் பல சுவாரஸ்யங்களைப் பேசலாம்.

என்னைப் பொறுத்தவரை என் கருத்து என்பது, அந்த நேரத்தில் நான் ஒரு சமாதானத் தூதராகச் செயல்பட்டேன். இப்போதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x