Last Updated : 29 Apr, 2021 05:06 PM

 

Published : 29 Apr 2021 05:06 PM
Last Updated : 29 Apr 2021 05:06 PM

நல்லவேளை நான் சிக்கவில்லை; ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது எனக்கு மறைமுக ஆசிர்வாதம்: ஆஸி. வீரர் லாபுஷேன் கருத்து

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் | படம் உதவி: ட்விட்டர்.

லண்டன்

இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் நான் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்காதது எனக்குக் கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷேன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருந்த ஆஸ்திரேலிய வீரர் லாபுஷேனை 8 அணிகளுமே விலைக்கு வாங்கவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனான லாபுஷேனை ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால், ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஏராளமான வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார்கள். ஐபிஎல் தொடர் நடந்து வரும் நேரத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள கரோனா வைரஸ் பரவல் சூழலைப் பார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்ஸன், ஆண்ட்ரூ டை ஆகியோர் தாயகம் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் லாபுஷேன், ஐபிஎல் தொடரில் தான் பங்கேற்காதது குறித்துக் கிண்டலாக சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், “ நல்லவேளை நான் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.

நான் ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது எனக்கு மறைமுகமான ஆசிர்வாதமாகவே நினைக்கிறேன். ஐபிஎல் டி20 தொடரில் விளையாட விருப்பமாகத்தான் இருக்கிறது. மிகப்பெரிய டி20 தொடர் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், எப்போதுமே ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருக்கும். ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தால், நிச்சயம் ஆஸ்திரேலியாவை விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு அணியில் இடம் பெற்று கோப்பையைக் கூட வென்றிருக்கலாம்.

2-வதாக இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் நல்லவிதமாக இல்லை. ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் பயோ-பபுள் சூழலில் இருந்தாலும்கூட கரோனா வைரஸ் அச்சத்தால், யாரும் பாதுகாப்பானதா உணரவில்லை. அனைவரும் நாடு திரும்புவது குறித்துச் சிந்திக்கிறார்கள்.

அவர்களைப் பற்றி நான் அதிகமாக யோசித்தாலும், பாதுகாப்பின்றி உணர்வதாக நினைக்கும் பெரும்பாலான வீரர்களிடம் இதுவரை நான் பேசவில்லை. எப்படியாகினும், அவர்கள் பாதுகாப்பாகத் தங்கியிருந்து, ஐபிஎல் தொடர் முடிந்து ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவார்கள் என நம்புகிறேன்''.

இவ்வாறு லாபுஷேன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x