Last Updated : 27 Apr, 2021 03:03 PM

 

Published : 27 Apr 2021 03:03 PM
Last Updated : 27 Apr 2021 03:03 PM

ஐபிஎல் ஒன்றும் அதிகாரபூர்வ தொடர் அல்ல; வீரர்கள் சொந்தச் செலவிலேயே நாடு திரும்பட்டும்: ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம்

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் | படம் உதவி: ட்விட்டர்.

மெல்போர்ன்

ஆஸ்திரேலிய அணியின் அதிகாரபூர்வத் தொடரின் ஒரு பகுதி அல்ல ஐபிஎல் டி20 தொடர். ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்தச் செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, 2-வது அலை தீவிரமாகியிருப்பதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே 15ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தப் பயணிகள் விமானம் வரவும் ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.

தற்போது ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்க்ஸ் ஸ்டாய்னிஷ், கம்மின்ஸ், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட 14 வீரர்கள் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர மேத்யூ ஹேடன், பிரட் லீ, மைக்கேல் ஸ்லாடர், லிசா ஸ்தாலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் உள்ளனர்.

இதற்கிடையே ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோரின் பயணத் திட்டம், எப்போது புறப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்துள்ளது. அப்போது, ஐபிஎல் டி20 தொடர் முடியும் வரை இந்தியாவில்தான் இருப்போம் என வாரியத்திடம் வீரர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ''ஒவ்வொரு ஐபிஎல் ஒப்பந்தத்திலும் 10 சதவீதத் தொகையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருவதால், போட்டி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தனியாக விமானம் வைத்து வீரர்களை அழைத்துச் செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிறிஸ் லின்

இந்தியாவில் தற்போது மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் மக்களைச் சிறிதளவு மகிழ்ச்சிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு ஐபிஎல் மட்டும்தான்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனிடம், அரசு சார்பில் வீரர்களுக்குத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்படுமா என்று நிருபர்கள் இன்று கேட்டனர். இதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியத் தொடரின் ஒரு பகுதியாக ஐபிஎல் டி20 தொடர் இல்லை. ஆஸி.வீரர்கள் சொந்தச் செலவில் சென்றுள்ளதால், அவர்களின் சொந்தப் பணத்தைப் பயன்படுத்திதான் வர வேண்டும். அவர்கள் தாயகம் திரும்ப வேண்டுமானால் விமானத்தைத் தனியாக அமர்த்திக் கொண்டு, சொந்தச் செலவில் நாடு திரும்பலாம்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களைக் கடுமையான பயோ-பபுள் விதிமுறையைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவில் இருந்து வரும் களத் தகவல்கள், ஆஸ்திரேலிய அரசின் அறிவுரைப்படி தொடர்ந்து செயல்படுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x