

கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி எனக்கு வழங்கிய அறிவுரைகளான, ஸ்லோ பவுன்ஸர் வீசுவது, அதிகமான கட்டர்களை வீசுவது போன்ற விஷயங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்று தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான யார்க்கர் நடராஜன் தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். யார்க்கர் வீசுவதில் வல்லவரான நடராஜன், கடந்த ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர்களை வீசியுள்ளார். இதில் முக்கியமாக எம்எஸ் தோனி விக்கெட்டையும், 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸுக்கு யார்க்கர் மூலம் ஸ்டெம்ப்பைத் தெறிக்கவிட்டு ஆட்டமிழக்கச் செய்தது இன்றளவும் பேசப்படுகிறது.
14-வது ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் கிரிக் இன்ஃபோ தளத்துக்கு நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
''கடந்த ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் பேசுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. என்னுடைய உடல் தகுதி குறித்துப் பேசிய தோனி, என்னை நன்றாக உற்சாகப்படுத்தினார். அதிகமான அனுபவத்தின் மூலம்தான் சிறப்பாகச் செயல்பட முடியும் என தோனி என்னிடம் தெரிவித்தார்.
பந்துவீசும் போது ஸ்லோ பவுன்ஸர்கள், லெக் கட்டர், இன் கட்டர் போன்ற பந்துகளை அதிகமாக வீச வேண்டும், பந்துவீச்சில் எப்போதும் வித்தியாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என எனக்கு தோனி அறிவுரை கூறினார்.
கடந்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு நான் பந்துவீசியபோது, ஓவர் ஸ்லாட்டில் பந்தை பிட்ச் செய்தபோது, அதை தோனி 102 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸராகப் பறக்கவிட்டார். ஆனால், அடுத்த பந்தில் தோனி ஆட்டமிழந்தார். தோனி ஆட்டமிழந்தவுடன் நான் சந்தோஷப்படவில்லை. முதல் பந்தில் அடித்த சிக்ஸர் மட்டும்தான் நினைவில் இருந்தது. அதைப் பற்றியே சிந்தித்தேன். நான் போட்டி முடிந்து ஓய்வறைக்கு வந்தபின் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பின் தோனி என்னை அழைத்து என்னுடன் உரையாடினார்.
மற்றொரு மறக்க முடியாத தருணம் என்னவென்றால், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டிவில்லியர்ஸை யார்க்கர் மூலம் ஆட்டமிழக்கச் செய்தேன். அன்றுதான் எனக்கு மகள் பிறந்ததாக செய்தி வந்தது. நாக் அவுட் ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதை அனைவரும் பாராட்டினார்கள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு மகள் பிறந்த செய்தியை அப்போது யாரிடமும் சொல்லவில்லை''.
இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.