Last Updated : 10 Dec, 2020 08:02 PM

 

Published : 10 Dec 2020 08:02 PM
Last Updated : 10 Dec 2020 08:02 PM

கோலியா? தோனியா? கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் யார்?- கவாஸ்கர், மேத்யூ ஹைடன் கருத்து

விராட் கோலி, தோனி : கோப்புப்படம்

மும்பை

கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் கோலிதான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு அளித்துள்ளார். ஆனால், தோனிதான் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்று ஆஸி. முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஆஸி. அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் கனெக்டெட் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில், கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் யார் என்பது குறித்து இருவரும் வாதிட்டனர்.

அதில் விராட் கோலிக்கு ஆதரவு அளித்துப் பேசிய சுனில் கவாஸ்கர், 10 ஆண்டுகளில் சிறந்த வீரர் கோலிதான் என்று தெரிவித்தார்.

கோலி குறித்து கவாஸ்கர் கூறியதாவது:

''இந்திய அணியில் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகமான கோலி, இதுவரை 86 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டி, 84 டி20 போட்டிகள் என மொத்தம் 22,208 ரன்களைக் குவித்துள்ளார். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெயரை எடுத்த கோலி, சச்சினின் நீண்டநாள் சாதனையையும் முறியடித்தார்.

ஏறக்குறைய சச்சின் 12 ஆயிரம் ரன்களை எடுக்கத் தேவைப்பட்ட இன்னிங்ஸைவிட, 58 போட்டிகள் குறைவாக 242 இன்னிங்ஸிலேயே கோலி இந்தச் சாதனையைப் படைத்தார். ஆதலால், கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்னைப் பொறுத்தவரை விாரட் கோலிதான். இந்திய அணி சேஸிங் செய்து வென்ற பல்வேறு போட்டிகளை ஆய்வு செய்தால், அதில் கோலியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும்.

இந்தியாவுக்காக சேஸிங்கில் பல போட்டிகளை கோலி வென்று கொடுத்துள்ளார். கோலி எடுத்த ரன்களையோ அல்லது விக்கெட்டுகளையோ பார்க்காமல், அவர் அளித்த தாக்கத்தை எடுத்துக் கொண்டால், கடந்த 10 ஆண்டுகளில் கோலிதான் பெரிய தாக்கத்தை ஒருநாள் போட்டிகளில் ஏற்படுத்தியுள்ளார்''.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

ஆனால், ஆஸி. அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், தோனிக்கு ஆதரவு அளித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என என்னைக் கேட்டால் அது மகேந்திர சிங் தோனிதான்.
தோனி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பையை வென்றது முக்கியமானது, குறிப்படத்தகுந்தது. அதிலும் உலகக் கோப்பையை வென்றது உண்மையிலேயே மிகப்பெரிய மைல்கல்.

இதற்கு முன் ஏராளமான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். ஆனால், உலகக் கோப்பைப் போட்டிக்கு நாம் தயாராகி வரும்போது, அணிக்குச் சிறந்த தலைவர் மட்டும் இருந்தால் போதாது. அமைதியான, வலிமையான, நடுவரிசையில் நிலைத்து ஆடக்கூடிய வீரர் தேவை. அதாவது தோனியைப் போல் கேப்டன் தேவை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x