Last Updated : 08 Nov, 2020 02:13 PM

 

Published : 08 Nov 2020 02:13 PM
Last Updated : 08 Nov 2020 02:13 PM

ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்ம்: இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட இரு வீரர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 13ஆம் சீசன் ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி, பேட்டிங்கில் சொதப்பியதால், இந்திய அணியில் இரு வீரர்கள் தங்களுக்குரிய இடத்தை இழந்துள்ளனர்.

இந்திய ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் இடம் பெற்ற அந்த இரு வீரர்களும் ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், கரோனா தொற்றுக்கு முன்பு நடந்த நியூஸிலாந்து தொடர், மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர் அனைத்திலும் அந்த இரு வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.

சிஎஸ்கே அணியின் கேதார் ஜாதவ், ஆர்சிபி அணியின் ஷிவம் துபே ஆகிய இரு வீரர்கள்தான் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் விளையாடினாலும் சரி, விளையாடாவிட்டாலும் சரி என்ற ரீதியில் 35 வயது கேதார் ஜாதவ் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இடம் பெற்று வந்தார். மே.இ.தீவுகள் தொடர், நியூஸிலாந்து தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் ஜாதவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக ஜாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிஎஸ்கே அணி மோசமாக விளையாடியதால் ஏற்பட்ட கோபத்தை விட கேதார் ஜாதவின் ஆட்டம் ரசிகர்களை உச்சகட்ட வெறுப்புக்குக் கொண்டு சென்றது.

சிஎஸ்கே அணி முக்கியமான ஆட்டங்களில் தோல்வி அடைய கேதார் ஜாதவின் மோசமான பேட்டிங் காரணமானது. இதனால் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கடுமையாக கேதார் ஜாதவ் விமர்சிக்கப்பட்டு அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வலுத்தது.

இந்திய அணிக்காக கேதார் ஜாதவ் கடைசியாக விளையாடிய இரு டி20 போட்டிகளிலும் 9, 27 ரன்கள்தான் சேர்த்தார். அதேபோல, ஷிவம் துபே இந்திய அணியில் இடம் பெற்று கடைசியாக 5 ஆட்டங்களில் 13,8,3,12,5 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ஐபிஎல் தொடரில் நிச்சயம் இருவரும் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரின் பேட்டிங்கும் மிக மோசமாக அமைந்தது. இதற்கான விலையாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிரண் மோர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை கேதார் ஜாதவை இந்திய அணியிலிருந்து நீக்கியது சரியானதுதான். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ஏராளமான பேட்டிங் வாய்ப்புகள் கேதார் ஜாதவுக்குக் கிடைத்தும், அதை அவர் பயன்படுத்தவில்லை.

பேட்டிங்கில் மோசமான ஃபார்மில் இருந்தபோதிலும்கூட கேதார் ஜாதவுக்கு வாய்ப்பு அளித்து சிஎஸ்கே அணி களமிறக்கியது. அப்போதுகூட அவர் பேட் செய்யவில்லை. ஒருவேளை ஜாதவ் பேட்டிங் செய்தாலும் 3 ஓவர்களுக்கு மேல் நீடித்தது இல்லை. சர்வதேச அணியில் விளையாடியதுபோல் ஜாதவ் விளையாடவில்லை. எதிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை.

இதேபோலத்தான் ஆர்சிபி அணி வீரர் ஷிவம் துபேவுக்கும் கேப்டன் கோலி அதிகமான வாய்ப்புகளை வழங்கினார். ஆனால், பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் துபே விளையாடவில்லை. ஷிவம் துபேவுக்கு இன்னும் வயது இருக்கிறது. அதிகமான பேட்டிங், பந்துவீச்சு பயிற்சி எடுத்தால் நல்ல நிலைக்கு அவர் வர முடியும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x