‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
Updated on
1 min read

வங்கதேச ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய ஏ அணி.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 52.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு சுருண்டது. இந்தியத் தரப்பில் வருண் ஆரோன், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 86.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவன் 150, சங்கர் 86, கருண் நாயர் 71 ரன்கள் எடுத்தனர். வங்கதேச தரப்பில் ஜுபைர் ஹுசைன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 123 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. மோமினுல் ஹக் 9, லிட்டன் தாஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 39.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மோமினுல் ஹக் 54, லிட்டன் தாஸ் 38 ரன்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் ஈஸ்வர் பாண்டே, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அபிமன்யூ மிதுன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in