Published : 22 Feb 2020 08:01 AM
Last Updated : 22 Feb 2020 08:01 AM

ரஹானேவுக்காக தன் விக்கெட்டைத் தியாகம் செய்த ரிஷப் பந்த்: சவுத்தி, ஜேமிசனிடம் 165 ரன்களுக்கு இந்தியா சுருண்டது

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 2ம் நாளான இன்று 122/5 என்று தொடங்கிய இந்திய அணி 165 ரன்களுக்கு மடிந்தது. டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளையும் கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து அணி சற்று முன் வரை 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 6 ரன்களுடனும் பிளண்டெல் 19 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

இன்று காலை 122/5 என்று தொடங்கியது இந்திய அணி. ஸ்பின்னர் படேல் வீசிய ஓவரில் ரிஷப் பந்த் இறங்கி வந்து வைட் மிட் ஆன் மேல் மிகப்பெரிய சிக்சரை அடித்து பாசிட்டிவாக தொடங்கினார். ஓரளவுக்கு நன்றாகவே ஆடினார். ஆனால் இன்றைய தினம் 4வது ஓவரை சவுத்தி வீச 2வது பந்தை பாயிண்டில் தட்டி விட்டார் ரஹானே. ரன்னர் முனையில் இருந்த ரிஷப் பந்த் தான் இந்த ரன்னுக்கு உண்மையில் அழைக்க வேண்டும், அவரும் முறையாக நோ... என்று கத்தினார், ஆனால் ரஹானே ரன்னர் முனை நோக்கி ஓடிக்கொண்டேயிருந்தார். அந்தச் சமயத்தில் ரஹானேவை திருப்பி அனுப்பினால் ரஹானே ரன் அவுட் ஆகிவிடுவார் என்று தன் விக்கெட்டை ரிஷப் பந்த் தியாகம் செய்ய முடிவெடுத்து பேட்டிங் முனை நோக்கி வந்தார் அதற்குள் அஜாஸ் படேலின் த்ரோ லேசாக பைலை தட்டி விட 19 ரன்களில் பந்த் ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்த் ஆட்டமிழந்த அடுத்த பந்தே அஸ்வினுக்கு, பிரித்வி ஷாவுக்குப் போட்ட அதே பந்தை போட்டார் சவுத்தி அதே முடிவு... கிளீன் பவுல்டு, அதாவது ஒரு ஆஃப் வாலி லெந்தில் மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆன அவுட்ஸ்விங்கர். பந்தின் ஸ்விங்கிற்கு ஏற்ப கால் நகர வேண்டும், இல்லை, கால் நகரவில்லை, பந்துதான் நகர்ந்து போய் ஸ்டம்பைப் பதம் பார்த்தது, அஸ்வின் டக் அவுட் ஆனார்.

பந்த் தனக்காக ஆட்டமிழந்திருக்கிறார் என்பது ரஹானேவுக்கு உத்வேகம் அளித்து ஒரு இன்னிங்சை ஆடுவார் என்று எதிர்பார்த்தால் அந்த ஆசையிலும் மண் விழுந்தது.

சவுத்தி, போல்ட் சிங்கிள்ஸ் கூட எடுக்க விடாமல் கட்டிப் போட ரஹானே ஒரு பந்தை பாயிண்ட்டின் மேல் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தே பவுன்சரை ஹூக் ஆட முயன்று டாப் எட்ஜ் பீல்டர் முன்னால் விழுந்தது.

கடைசியில் சவுத்தி ஒரு அவுட்ஸ்விங்கரை வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீச ரஹானே ஸ்டம்பைக் கவர் செய்து அதனை ஆடாமல் விட நினைத்தார், ஆனால் தாமதமான முடிவு பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு வாட்லிங்கின் டைவிங் கேட்ச் ஆனது, ரஹானே 138 பந்துகளில் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ரிஷப் பந்த் விக்கெட்டையும் சேர்த்து வீழ்த்தியதோடு ரஹானேயின் இன்னிங்ஸ் முடிவடைந்தது. 143/8 என்ற நிலையில் முகமட் ஷமி 3 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. சவுத்தி 4 விக்கெட்டுகளையும் ஜேமிசன் இன்று இஷாந்த் சர்மா விக்கெட்டை வீழ்த்தியதுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் அளவுக்கு இந்த பிட்சில் ஒன்றுமில்லை, வழக்கம் போல் பேட்ஸ்மென்களிடம் ’அப்ளிகேஷன்’ இல்லை. ரவி சாஸ்திரி, விராட் கோலி போன்றோர் எல்லா வீரர்களையும் அவர்களது திறமையை மீறி அளவுக்கதிகமாக புகழ்ந்து தள்ளியதால் அவர்கள் தங்களை மிகப்பெரிய வீரர்களாக நினைத்து ஆடுகின்றனர். அதனால் தங்களை ஏதோ விவ் ரிச்சர்ட்ஸ் என்று நினைத்துக் கொண்டு தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தனர்.

நியூஸிலாந்து அணி டாம் லேதம் (11) விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றது, வில்லியம்சன் 3 பிரமாதமான பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தும் பிளண்டெல் 30 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர், பும்ரா தன் வேகத்தையும் இழந்து விட்டார், இந்திய பவுலர்கள் அனைவரும் ஒன்று ஷார்ட் பிட்ச் அல்லது ஃபுல் லெந்த் என்று தவறாக வீசுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x