

உத்தரப் பிரதேச மாநிலம், சான்டாவுலி நகரில் நடந்த 65-வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை பிரிவில் தமிழக மாணவி எம்.மதுரா வர்ஷினி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சான்டாவுலி நகர், சாஹித்கான் பகுதியில் உள்ள அமர் சாஹித் வித்யா மந்திர இன்டர் காலேஜில் 65-வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடந்தது.
தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நகரங்களில் நடத்தப்படும். அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் இந்த முறை வில்வித்தை போட்டிக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் ஏறக்குறைய 400 மாணவ, மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவி எம்.மதுரா வர்ஷினி 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான வில்வித்தை பிரிவில் பங்கேற்றார். இதில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவி மதுரா வர்ஷினி வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவி மதுரா வர்ஷினிக்கு பள்ளியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரஹாம் பாராட்டு தெரிவித்தார்.
தவறவிடாதீர்!