

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
கவுகாத்தியில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் குடியுரிமைத் திருத்தச்ச ட்டம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போது விராட்கோலி தெரிவித்த கருத்து பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்திய அரசியல் வரலாற்றில் பண மதிப்பிழப்பு மிகப்பெரிய நடவடிக்கை என்று கோலி தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
அதேபோன்ற சூழல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் கோலி.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் கூறுகையில், "குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் நான் பொறுப்பற்ற வகையில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க முடியாது. சிஏஏ குறித்து இருதரப்பு கருத்துகள் நிலவுகின்றன. நான் ஏதாவது கருத்து கூறினால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். சிஏஏ குறித்து நான் முழுமையான தகவலையும், முழுமையான புரிதலையும் அறிந்து கொள்வது அவசியம். அவ்வாறு இல்லாமல் என்ன நடந்து கொண்டிருப்பதை அறியாமல் பொறுப்பற்ற முறையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது.
நான் ஒன்று சொல்லலாம், மற்றவர்கள் ஒன்று சொல்வார்கள். ஆதலால், முறையான புரிதல் இல்லாமல் ஏதாவது நான் கருத்து தெரிவித்தால் நான் பொறுப்பற்ற முறையில் பேசிவிட்டதாக அமையும்" எனத் தெரிவித்தார்.