Last Updated : 21 Oct, 2019 12:39 PM

 

Published : 21 Oct 2019 12:39 PM
Last Updated : 21 Oct 2019 12:39 PM

இந்திய சுழற்பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா திணறல்: பாலோ-ஆன் வழங்குவாரா விராட் கோலி?

ராஞ்சி

ராஞ்சியில் நடந்துவரும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

நண்பகல் உணவு இடைவேளையின்போது, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்துள்ளது. லிண்டே 11 ரன்னிலும், நார்ட்ஜே ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருக்கின்றனர்.

ஏற்கெனவே நேற்றைய ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்று ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளக்குப் பின் 128 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

இன்னும் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்துவரும் பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் எதிர்கொண்டு சவால் விடுக்கும் வகையில் விளையாடக் கூடியவர்கள் அல்ல.

இன்னும் இந்திய அணியைக் காட்டிலும் 366 ரன்கள் பின்தங்கி இருப்பதால், ஒருவேளை விரைவாக ஆட்டமிழக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு பாலா-ஆன் வழங்குவாரா விராட் கோலி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியில் அறிமுக வீரராக வந்துள்ள ஷான்பாஸ் நதீம் தனது நேர்த்தியான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடி அளித்தார். குறிப்பாக பவுமாவின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அஸ்வின், ஜடேஜா, நதீம் ஆகிய மூன்று சுழற்பந்துவீச்சாளர்களும் ஒவ்வொரு விதமாக பந்துவீசியதால், மூவரின் பந்துவீச்சையும் சமாளித்து ஆடுவதற்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் ரன் சேர்ப்பதில் பெரும் மந்தநிலை ஏற்பட்டது.

இவர்களுக்குத் துணையாக உமேஷ் யாதவும், ஷமியின் வேகப்பந்துவீச்சு தாக்குதலும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. குறிப்பாக உமேஷ் யாதவ் இன்று ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே டூப்பிளஸின் விக்கெட்டை கிளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார். அதிலிருந்து மீண்டுவர தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அதிகமான நேரம் தேவைப்பட்டது.

முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் சேர்த்திருந்தது. ஹம்ஸா ரன் சேர்க்காலும், டூப்பிளஸிஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இருவரும் ஆட்டமிழக்காமல் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். காலை நேரத்தின் குளிர்ச்சி, ஆடுகள ஈரப்பதம் ஆகியவற்றைப் பயன்படுத்திய உமேஷ் யாதவ், முதல் ஓவரின் 5-வது பந்தில் க்ளீன் போல்டாக்கி ஒரு ரன்னில் டூப்பிளஸியை வெளியேற்றினார்.

அடுத்து வந்த பவுமா, ஹம்ஸாவுடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் நிதானமாக பேட் செய்தார்கள். இந்திய அணியின் ஜடேஜா, நதீம், அஸ்வின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதற்கு இருவரும் மிகுந்த சிரமபட்டு ரன்களைச் சேர்த்தனர். இதில் ஹம்ஸா ஓரளவுக்கு நிலைத்தபின் தனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். 56 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீ்ச்சாளர்கள் சிறிது சிரமப்பட்டனர்.

ஜடேஜா வீசிய ஓவரில் பந்தை ஸ்டெம்ப் அருகே விட்டு கட் செய்ய முயன்றார் ஹம்ஸா. ஆனால், பந்து வேகமாக வந்து திரும்பியதால், ஹம்ஸாவால் நினைத்த ஷாட்டை ஆட முடியாமல் பந்து ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது. ஹம்ஸா 62 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து கிளாஸன் களமிறங்கி, பவுமாவுடன் சேர்ந்தார். இருவரும் களத்தில் நிலைபெறுவதற்குள், அடுத்த ஓவரில் நதீம் தனது முதல் விக்கெட்டாக பவுமாவை வெளியேற்றினார்.

நதீம் வீசிய பந்தில் அடித்து ஆட முற்பட்ட பவுமாவை 32 ரன்களில் விக்கெட் கீப்பர் சாஹா ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார். அடுத்துவந்த பீடெட் கிளாஸனுடன் சேர்ந்தார். கிளாஸன் 6 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

பீடெட், லிண்டே இருவரும் ஜோடி சேர்ந்தனர். உணவு இடைவேளைக்குப் பின் இருவரும் மீண்டும் பேட் செய்தனர். முகமது ஷமி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பீடிட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபாடா ரன் ஏதும் சேர்க்காமல் ரன் அவுட் ஆகினார்.

இந்தியத் தரப்பில் ஷமி, ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x