உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: பிசிசிஐ

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: பிசிசிஐ
Updated on
1 min read

ஐபிஎல் சூதாட்ட வழக்கின் மீதான தீர்ப்பை வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி ஆண்டுப் பொதுக்கூட்டம் கூட்டப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள கால அவகாசத்திற்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவினை பிசிசிஐ வரவேற்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு சில காலங்களாக இருந்து வந்த நிச்சயமின்மையை தன் தீர்ப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள 3 நபர் கமிட்டிக்கு பிசிசிஐ தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும். பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் உள்ளிட்டவைகளை முடிவு செய்யும் ஆண்டுப் பொதுக்கூட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படியும் நிர்ணயித்துள்ள காலக்கெடுவின் அடிப்படையிலும் நிறைவேற்றப்படும்.” என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in