தோனியை விலகச் சொல்ல மாட்டேன்: சீனிவாசன் திட்டவட்டம்

தோனியை விலகச் சொல்ல மாட்டேன்: சீனிவாசன் திட்டவட்டம்
Updated on
1 min read

தோனியை நான் ஏன் விலகச் சொல்ல வேண்டும் என்று ஐசிசி தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி வகித்து வரும் தோனியை நான் ஏன் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபில் ஸ்பாட் பிக்சிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் சீனிவாசன், தோனி ஆகியோரது ‘முரண்பட்ட இரட்டை நலன்கள்’ குறித்து கேள்வி எழுப்பியது.

மேலும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக முடிவுகளை எடுப்பவர் யார்? நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், சீனிவாசன் குடும்பத்தினருக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள பங்கு மூலதனம் பற்றிய விவரங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்டது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து வாயைத் திறந்துள்ள சீனிவாசன், “நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், நான் கருத்துகள் எதையும் தெரிவிக்கக் கூடாது” என்றார்.

தோனியை பொறுப்பிலிருந்து விலகக் கோருவீர்களா என்ற கேள்விக்கு “நான் எதற்கு அவரை ராஜினாமா செய்யச்சொல்ல வேண்டும்?” என்றார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் தோனியின் பங்கு என்ன என்று கேட்ட போதும், “நான் எதற்கு உங்களிடம் கூற வேண்டும்?” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in