Last Updated : 30 Jun, 2019 07:32 PM

 

Published : 30 Jun 2019 07:32 PM
Last Updated : 30 Jun 2019 07:32 PM

160 ரன்களை வாரி வழங்கிய சாஹல், குல்தீப்: பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ராய் காட்டடி: இந்திய அணிக்கு 338 ரன்கள் இலக்கு

சாஹல், குல்தீப், முகமது ஷமி ஆகியோர் ரன்களை வாரி வழங்கியதால், எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 338 ரன்கள் எனும் இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

2011-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 339 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. அந்த ஆட்டம் 338 ரன்கள் ரன்களில் டிரா ஆனது. குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் முதல் 10 ஓவர்கள் வரை பும்ராவும், ஷமியும் நன்றாக வீசியதால் 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால்  குல்தீப், சாஹல் இருவரும் பந்துவீச வந்தது, ஜேஸன் ராய்க்கும், பேர்ஸ்டோவுக்கும் அல்வா கிடைத்தது போல் அமைந்தது. இருவரின் பந்துவீச்சையும் நொறுக்கி அள்ளினார்கள். 11-வது ஓவர் முதல் 20 ஓவர்கள் வரை 98 ரன்கள் விளாசினர்

ஆனால், 31 ஓவர்களில் இருந்து 40 ஓவர்கள் வரை கட்டுக்கோப்பாக வீசியதால், 52 பந்துகள் வரை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் பவுண்டரி அடிக்கமுடியவில்லை. 31 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை இந்திய அணி 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

தொடக்கத்தில் பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் அடித்த வேகத்தையும், ரன் ரேட் உயர்ந்ததையும் பார்த்தபோது, 350 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுப்பகுதியில் ரன்வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்திய அணியின் பந்துவீச்சு மோசம் என்று கூறிவிடமுடியாது. ஆடுகளம் தட்டையாக எழும்பாமல், சுழற்பந்துவீச்சுக்கு உதவாமல், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், ரன்கள் அடிக்கப்பட்டன. இதேபோன்று இந்தியாவுக்கும் அடித்து ஆடுவதற்கு இந்த ஆடுகளம் உதவும் என்பதை மறந்துவிடக்கூடாது.

என்னதான் இருந்தாலும், சாஹல், குல்தீப் பந்துவீச்சு மோசம்தான். இருவரும் கூட்டாக 20 ஓவர்கள் பந்துவீசி 160 ரன்கள் வாரி வழங்கினார்கள். குல்தீப் ஒருவிக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

முதல் இரு ஸ்பெல்களை கட்டுக்கோப்பாக வீசிய ஷமி, கடைசிநேரத்தில் ஃபுல்டாஸாக வீசி ஜோஸ் பட்லரையும் பென் ஸ்டோக்ஸையும் அடிக்கவிட்டார். நன்றாக பந்துவீசிய ஷமி கூடுதலாக 20 ரன்களை அடிக்கவிட்டார். இதனால் 10 ஓவர்களில் ஷமி 69 ரன்கள் கொடுத்தாலும் 5 விக்கெட்டை வீழ்த்தி அதை ஈடுகட்டிவிட்டார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் வின்ஸ், மொயின் அலிக்கு  பதிலாக ஜேஸன் ராய், பிளங்கெட் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக அணியில் இடம் பெறுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அதேபோல இந்திய அணியில் ஒருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக  இளம் வீரர் ரிஷப் பந்த் வாய்ப்பு பெற்றுள்ளார். உலகக் கோப்பைப் போட்டிக்கு முதல் முறையாகதேர்வு செயயப்பட்டு, முதல்முறையாகவே ரிஷப் பந்த் விளையாடும் 11பேர் கொண்ட அணியில் தேர்வாகியுள்ளார். கருநீலம், ஆரஞ்சு வண்ணத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஆடையில் இந்திய அணி களமிறங்குகிறது

இங்கிலாந்து அணிக்கு ஜேஸன் ராய், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை இருவரும் வெளுத்துவாங்கினார். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ராய் இரு பவுண்டரிகள் அடித்தார். அதன்பின் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரியை அடித்ததால், வேறு வழியின்றி 6-வது ஓவரை சாஹல் வரவழைக்கப்பட்டார்.

சாஹல் ஓவருக்கு தொடக்கத்தில் பயந்த ஜேஸன் ராய், பேர்ஸ்டோ அதன் காட்டடி அடித்தனர். 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து.

ஹர்திக் பாண்டியாவீசிய 11-வது ஓவரில் பேர்ஸ்டோ பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். அதன்பின் சாஹல், குல்தீப், பாண்டியா மூவரின் பந்துவீச்சையும் ராயும், பேர்ஸ்ட்டோவும் துவம்ஸம் செய்து சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்துகள்பறந்தன. 15 ஓவர்களில் இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டியது.

பேர்ஸ்டோ 56 பந்துகளிலும், ஜேஸன் ராய் 41 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரின் அதிரடியையும் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் விராட் கோலி திணறினார். இந்திய வீரர்கள் எப்படி பந்துவீசினாலும் ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸர் பறந்தது. 20 ஓவர்களி்ல 150 ரன்களை எட்டியது இங்கிலாந்து அணி.

முதல் 10 ஓவர்களில் 47 ரன்களை எடுத்த இங்கிலாந்த அணி அடுத்த 10 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்தது.

குல்தீப் யாதவ் வீசிய 23-வது ஓவரில் ஜேஸன் ராய் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முயற்சிக்க அது அங்கிருந்த ரவிந்திர ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. ராய் 57 பந்துகளில் 2சிக்ஸர், 7பவுண்டரி உள்பட 66 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். மிகுந்த சிரமத்துக்குப்பின் ஜேஸன் ராய் விக்கெட்டை இந்திய வீரர்கள் கழற்றினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 160 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து ஜோ ரூட் களமிறங்கி பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்த பேர்ஸ்டோ 90 பந்துகளில் சதம் அடித்தார். இது உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சதம் ஆகும். பன்னாட்டு அளவில் 7-வது சதமாகும். 109 பந்துகளில் 6 சிக்ஸர்,10 பவுண்டரி உள்பட 111 ரன்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் மோர்கன் ஒரு ரன்னில் ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்டோக்ஸ், ரூட்டுடன் சேர்ந்தார். மெதுவாக தொடங்கிய ஸ்டோக்ஸ், நேரம் செல்லச் செல்ல ஸ்டோக்ஸ் அதிரடிக்கு மாறினார். 40 ஓவர்களில் இங்கிலாந்து அணி 250 ரன்களை எட்டியது. 

இருவரும் சேர்ந்து 70 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரூட் 44 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்துவந்த பட்லர் அதிரடியாக இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த வோக்ஸ் 7ரன்னில் வெளியேறினார்.

கடைசிவரை அதிரடியாக பேட்செய்த பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். பிளங்கெட் ஒருரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்களி்ல் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x