Last Updated : 07 Apr, 2017 10:42 AM

 

Published : 07 Apr 2017 10:42 AM
Last Updated : 07 Apr 2017 10:42 AM

மே.இ.தீவுகள் தொடருடன் ஓய்வு பெறுகிறார் மிஸ்பா

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக லாகூரில் நேற்று செய்தியாளர்களிடம் 42 வயதான மிஸ்பா உல்-ஹக் கூறியதாவது:

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸட்தான் எனது கடைசி தொடர்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டேன். ஒரு கட்டத்தில் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். ஆனால் நாங்கள், உலகின் நம்பர் 1 அணி அந்தஸ்தை அடைந்த தருணம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக எனது செயல்பாடு திருப்தி அளிக்கிறது.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால் நினைத்ததை எல்லாம் பெறமுடியாது. அதுதான் வாழ்க்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

மிஸ்பா உல்-ஹக் இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,951 ரன்கள் சேர்த்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டி மற்றும் டி20-ல் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

சமீபத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொட ரில் 0-2 என்ற கணக்கிலும், ஆஸ்தி ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கி லும் மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணி படுதோல்வி களை சந்தித்திருந்தது.

கடைசி இரு தொடர்களில் தோல்வியை சந்தித்த போதிலும் அதற்கு முன்னர் சிறப்பாக விளை யாடிய பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக நம்பர் ஒன் அந்தஸ்தை பெற்றிருந்தது. குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் அணியிடம் இருந்து நம்பர் ஒன் இடத்தை இந்திய அணி பறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி பார்படாசில் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x