Published : 21 May 2017 11:56 PM
Last Updated : 21 May 2017 11:56 PM

பரபரப்பான ஆட்டத்தில் புனேவை வீழ்த்தி மும்பை சாம்பியன்

ஐபிஎல் 10-வது சீஸன் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. மும்பையின் 130 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், 20 ஓவர்களில் புனே அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை பவுலர்கள் அனைவரும் வெகு சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தனர்.



ஐபிஎல் 10-வது சீஸனின் இறுதி ஆட்டம் ஹைதராபாதில் நடைபெற்றது. மும்பை நிர்ணயித்த 130 ரன்கள் என்ற எளிய இலக்கை புனே அணி தடுமாற்றத்துடன் எதிர் கொண்டு, கடைசியில் தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவையாயிருக்க, ஜான்சன் வீசிய அந்த ஓவரில் 9 ரன்களை மட்டுமே புனே அணியால் எடுக்க முடிந்தது.

நிதான தொடக்கம், இறுகிய பிடி

புனேவுக்கு வெற்றி தேடித் தர, ரஹானே, த்ரிபாதி இருவரும் களமிறங்கினர். இதுவரை இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வந்து கவனம் ஈரத்த புனே வீரர் த்ரிபாதி 3-வது ஓவரில் 3 ரன்களுக்கு பும்ராவின் வேகத்தில் வீழ்ந்தார். ஆனால் பால் ட்ராக்கிங் மூலம் பார்க்கையில் பந்து ஸ்டம்பை தாக்கியிருக்காது எனத் தெரிந்தது. த்ரிபாதியின் வெளியேற்றம் துரதிர்ஷ்டவசமாக இருந்தாலும் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சேஸிங்கை ஸ்திரமாக்கினார்.

தொடர்ந்து புனேயின் ஆட்டம் நிதானமாகவே இருந்தது. தேவைப்பட்ட சராசரி ரன்கள் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் இருந்தாலும் ரஹானே - ஸ்மித் இணை பதற்றமின்றியே ஆடியது. 12-வது ஓவரில் ரஹானே லாங்க் ஆன் பகுதியில் அடித்த பந்தை முன்னால் பாய்ந்து அற்புதமாக கேட்ச் பிடித்தார் பொல்லார்ட். ரஹானே 44 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து தோனி களமிறங்கினார். ஆனால் எதிர்பார்த்த அதிரடி ஆட்டத்தை ஸ்மித், தோனி இருவரும் வெளிப்படுத்தவில்லை.

மும்பையின் பந்துவீச்சும் எதிர்கொள்ள கடினமாகவே இருக்க, இரண்டாவது ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்டின் போது 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவையாயிருந்தது.

டைம் அவுட் முடிந்து க்ருணாள் பாண்டியா வீசிய 16-வது ஓவரில், தோனி ஒரு பவுண்டரி, ஸ்மித் ஒரு சிக்ஸர் என அடித்து சற்று பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் பும்ராவின் அடுத்த ஓவரில் தோனி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். பந்துவீச்சு இன்னும் இறுக்க 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என ஆட்டம் இந்த கட்டத்தில் உண்மையான டி20 போட்டியாக மாறியது.

ஆட்டத்தின் 18-வது ஓவரை மலிங்கா வீச, ஒரு பவுண்டரியும் 3 சிங்கிள் மட்டுமே புனே அணியால் எடுக்க முடிந்தது. இப்போது 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலை.

19-வது ஓவரை பும்ரா வீச, முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் வந்தது. 5வது பந்தை ஸ்மித் சிக்ஸருக்கு விளாச, சேஸிங்கின் இறுக்கம் சற்று தளர்ந்தது. அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஆட்டம் சுவாரசியாமக மாறியது.

பரபரப்பான கடைசி ஓவர்

மிட்சல் ஜான்சன் வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தை திவாரி பவுண்டரிக்கு விரட்டினார். 5 பந்துகளில் 7 ரன்கள் தேவை. டி20 ஆட்டத்தின் போக்குக்கு இது எளிதாக தோன்றினாலும், மும்பையின் பந்துவீச்சுக்கு முன் இது பெரும் சவாலாகவே இருந்தது. 2-வது பந்தில் திவாரி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் கேட்ச் பிடிக்கும் முன் பேட்ஸ்மேன்கள் கடந்து விட்டதால், ஸ்மித் அடுத்த பந்தை எதிர்கொண்டார்.

ஆனால் அந்த பந்தில் கேட்ச் கொடுத்து ஸ்மித்தும் ஆட்டமிழந்தார். வெற்றிவாய்ப்பு மும்பைக்கு சாதகமாக மாறியது. 3 பந்துகளில் 7 ரன்கள் என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட அடுத்த பந்து பேட்டில் படவில்லை என்றாலும் ரன் எடுக்க, க்றிஸ்டியன் ஆட வந்தார்.

5-வது பந்தில் கடினமான கேட்ச் ஒன்றை ஹர்திக் பாண்டிய தவறவிட, 2 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி. மீண்டும் களத்தில் க்றிஸ்டியன். கடைசி பந்தை ஸ்கொயர் லெக் பகுதிக்கு விரட்டி 2 ரன்கள் ஓடிய க்றிஸ்டியன், 3 வது ரன் எடுக்கும்போது க்ருணாள் பாண்டியா வீசிய கச்சிதமான த்ரோவில் ரன் அவுட் ஆனார். 128 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த புனே அணி 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

மும்பையின் 4-வது ஐபிஎல் இறுதிப் போட்டி இது. 3வது ஐபிஎல் பட்டம் இது. புனேக்கு முதல் ஐபிஎல் இறுதி இது. அடுத்த ஆண்டு புனே, குஜராத் அணிகளுக்கு பதில், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் இணையவுள்ளதால் புனே அணி ஆடும் கடைசி ஐபிஎல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுமாறிய மும்பை, கடைசியில் கைகொடுத்த பாண்டியா

பேட்டிங்குக்கு சாதமாக ஹைதரபாத் பிட்ச் இருக்கும் என கணிக்கப்பட்டதால் முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் புனே அணியின் கட்டுப்பாடான பந்துவீச்சு மும்பையை கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கியது.

உனத்காட், ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே பார்த்திவ் படேல், சிம்மன்ஸ் ஆகியோரை வீழ்த்தி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். ஃபெர்க்யூஸன் வீசிய 6-வது ஓவரில், மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரிகள் அடித்து சிறிது நம்பிக்கையளித்தார். துரதிர்ஷ்டவசமாக 8வது ஓவரில் ராயுடு ரன் அவுட் ஆக, தொடர்ந்து ரோஹித் சர்மாவும் அடுத்த சில ஓவர்களில் 24 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அதே ஓவரில் பொல்லார்ட் ஒரு சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். ஓவரின் கடைசி பந்தை மீண்டும் சிக்ஸ் அடிக்க முயற்சிக்க, லாங்க் ஆன் பகுதியில் நின்று கொண்டிருந்த திவாரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஒரு முனையில் க்ருணாள் பாண்டியா மட்டும் சற்று ரன் சேர்க்க, மறு முனையில் அடுத்தடுத்து மும்பை வீரர்கள் ஆட்டமிழக்க அந்த அணி 14.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. கடைசி கட்டத்தில் பாண்டியா சில பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச, மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் என்ற மரியாதையான ஸ்கோரை எட்டியது. பாண்டியா 20-வது ஓவரின் கடைசி பந்தில் 47 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார்.

புனே தரப்பில் உனத்காட், தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினர். உனத்காட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஜாம்பா, க்றிஸ்டியன் இருவரும் ரன்கள் கொடுத்தாலும், தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x