

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார்.
மே.இ.தீவுகள் பயணத்தின் போது தேர்வு செய்யப்பட்ட 17 வீரர்களில் 15 பேர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஸ்டூவர்ட் பின்னி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை.
நடைபெற்று வரும் துலீப் கோப்பை பிங்க் பந்து போட்டியில் செடேஷ்வர் புஜாரா 166 மற்றும் 256 ரன்களை 3-ம் நிலையில் களமிறங்கி எடுத்துள்ளதால், இந்திய அணியில் தொடக்க வீரர் பிரச்சினை மூண்டுள்ளது.
அதாவது விஜய், தவண், லோகேஷ் ராகுல் ஆகியோர் உள்ளதால், தொடக்க வீரர்களாக யார் யார் களமிறங்குவார்கள் என்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.
சுழற்பந்து பிரிவில் அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா உள்ளனர், வேகப்பந்து பிரிவில் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி, புவனேஷ் குமார் உள்ளனர்.
கான்பூரில் செப்டம்பர் 22-ம் தேதி இந்தியா-நியூஸிலாந்து முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது, முன்னதாக செப்டம்பர் 16-ம் தேதி மும்பை அணியுடன் நியூஸிலாந்து பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.
தற்போதைய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது, முதலிடம் வகிக்கும் பாகிஸ்தானை விட ஒரு புள்ளி மட்டுமே இந்திய அணி பின் தங்கியுள்ளது.
டெஸ்ட் அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்கிய ரஹானே, அஸ்வின், ஷிகர் தவண், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், அமித் மிஸ்ரா, மொகமது ஷமி, புஜாரா, லோகேஷ் ராகுல், விருத்திமான் சஹா, இசாந்த் சர்மா, ரோஹித் சர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ்.