Published : 07 Jan 2014 01:05 PM
Last Updated : 07 Jan 2014 01:05 PM

உலக ஹாக்கி லீக்: இந்திய அணியை கணிக்க முடியாது
அஸ்திரேலிய உதவிப் பயிற்சியாளர்

உலக ஹாக்கி லீக் பைனல் போட்டியில் இந்திய அணியை யாராலும் எளிதில் கணிக்க முடியாது என ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் உதவிப் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: உலக ஹாக்கி லீக் பைனலைப் பொறுத்தவரையில் ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய அணிகள் மிகச்சிறந்த அணிகளாக இருக்கும். ஆனால் இந்தியா கணிக்க முடியாத அணியாகும். இந்திய வீரர்கள் வலுவான அணிகளுக்கு எதிராகக்கூட அபாரமாக ஆடி அந்த அணிகளைத் தோற்கடித்துவிடுவார்கள். எனவே அவர்களுக்கு எதிராக விளையாடும்போது கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும் என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் நோவ்ல்ஸ் கூறுகையில், “ஆஸ்திரேலிய அணி மிகுந்த உற்சாகத்தோடு உள்ளது. இந்தியாவில் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. காயம் காரணமாக ஒரு சில வீரர்களை இழந்தாலும், ஹாக்கி லீக் பைனலில் எவ்வித சவால் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள “பி” பிரிவு மிகவும் சவால் நிறைந்தது. இந்த பிரிவில் நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. எனினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நன்றாக விளையாட முடியும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்றார்.

உலக ஹாக்கி லீக் பைனல் வரும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை தலா இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூஸிலாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதில் தீவிரமாக உள்ளது. அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் உலக ஹாக்கி லீக்கில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையைப் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x