

2015-ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியே நான் விளையாடவுள்ள கடைசி உலகக் கோப்பை போட்டி என இலங்கையின் மூத்த வீரரான குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். இதனால் அவர் உலகக் கோப்பை போட்டியோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பையோடு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து விடைபெறவுள்ள சங்ககாரா கூறியிருப்பதாவது:
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரையில் நேரத்தை ஒதுக்குவது கடினமானது. இப்போது எனக்கு 36 வயதாகிறது. 2015 உலகக் கோப்பையின்போது 37 வயதை எட்டிவிடுவேன். அடுத்த உலகக் கோப்பையின்போது 41 வயதாகியிருக்கும். அப்போதும் விளையாடிக் கொண்டிருப்பேன் என நான் நம்பவில்லை. 2015 உலகக் கோப்பையே நான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை போட்டி.
டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரையில் பார்ம், உடற்தகுதி இருக்கும்பட்சத்தில் தொடர்ந்து விளையாடலாம். எனது கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
திரிமானி, சன்டிமல் ஆகியோர் எனது இடத்தையும், ஜெயவர்த்தனாவின் இடத்தையும் நிரப்புவார்கள் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.