

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இந்தூர் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி காலிறுதிக்கு முன்னேறினார்.
சர்வதேச தரவரிசையில் 451-வது இடத்தில் இருக்கும் மைனேனி நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் 1-6, 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 202-வது இடத்தில் இருப்பவரும், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்தவருமான பெல்ஜியத்தின் கிம்மர் கோபிஜன்ஸை தோற்கடித்தார்.
சர்வீஸ் அடிப்பதில் வல்லவரான மைனேனி, தனது காலிறுதியில் சகநாட்டவரான சனம் சிங்கை சந்திக்கிறார். சனம் சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சனம் சிங் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4-6, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான விஜயசுந்தர் பிரசாந்தை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 4-6, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தாய்லாந்தின் சன்சாய் ரதிவதனா-சன்சாட் ரதிவதனா ஜோடியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.