இதுதான் நேர்மை, ஜென்டில்மேன் கேம்: ஹேண்ட்ஸ்கம்ப்க்கு பாடம் கற்றுக்கொடுத்த கே.எல்.ராகுல்: பாராட்டு குவிகிறது

இதுதான் நேர்மை, ஜென்டில்மேன் கேம்: ஹேண்ட்ஸ்கம்ப்க்கு பாடம் கற்றுக்கொடுத்த கே.எல்.ராகுல்: பாராட்டு குவிகிறது
Updated on
2 min read

கிரிக்கெட் போட்டியில் நேர்மையாக எவ்வாறு ஒரு வீரர் நடக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கம்ப்புக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் நடந்து கொண்டார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து வலுவான நிலையில் இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால், இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்பது தெளிவாகி உள்ளது.

ஆனால், கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை வெறுப்பேற்றி விளையாடுவது, ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது ஒருபக்கம் இருந்தாலும், தரையில் பட்டு வந்த பந்தை கேட்ச் என்று சொல்லி ஆட்டமிழக்கச் செய்வது கிரிக்கெட்டின் அடிப்படை நேர்மைக்கு விரோதமானதாகும். ஜென்டில்மேன் கேமின் தாத்பரியத்துக்கு வேட்டுவைப்பதாகும். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஆஸ்திரேலய வீரர்கள் பெருமளவு ஈடுபட்டுள்ளார்கள். இந்த தொடரிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் விதிவிலக்கு அல்ல.

பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 123 ரன்களில் வலுவாக இருந்தார். கம்மின்ஸ் வீசிய 93-வது ஓவரில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஹேண்ட்ஸ்கம்ப் விராட் கோலியின் பேட்டில் பட்டு வந்த பந்தை கேட்ச் பிடித்தார்.

இந்த கேட்ச்சுக்கு உடனே களத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததால், இது குறித்து அப்பீல் செய்யப்பட்டது. மூன்றாவது நடுவர் ஆய்வு செய்தபோது, ஹேண்ட்ஸ்கம்ப் பிடித்த கேட்ச் பந்து தரையில் பட்டபின்புதான் எடுத்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், களநடுவரின் முடிவை மாற்ற முடியாது என்பதால், அவுட் இல்லாததற்கு விராட் கோலிக்கு அவுட் அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர், எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

ஆனால் இன்று நடந்த சம்பவத்தின் மூலம் ஆஸ்திரேலிய வீரர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துள்ளார் இந்திய அணி வீரர் கே.எல். ராகுல்.

15-வது ஓவரை ரவிந்திர ஜடேஜா வீசினார். களத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹாரிஸ் பேட் செய்தார். 3-வது பந்தை ஹாரிஸ் தூக்கி மிட்ஆப் திசையில் அடிக்க அந்தப் பந்தை கே.எல்.ராகுல் ஓடி வந்து கேட்ச் பிடித்தார்.

கே.எல். ராகுல் கேட்ச் பிடித்ததைப் பார்த்த இந்திய வீரர்கள் ஜடேஜா, கோலி, ரஹானே அனைவரும் ஓடிவந்து ராகுலை பாராட்டினர். ஆனால், கே.எல். ராகுல், தான் பிடித்த கேட்ச் சரியானது அல்ல, தரையில் பட்டபின் பிடித்துவிட்டேன். இது கேட்ச் அல்ல என்று சைகையில் உணர்த்தினார். இதைக் கேட்ட நடுவர் வியப்படைந்து சற்றுபுன்னகை செய்தவாறு மீண்டும் ஆட்டத்தை தொடங்குமாறு கூறினார்.

பவுண்டரி அருகே நின்றிருந்த பும்ரா ஓடிவந்து கே.எல்.ராகுல் செயலைப் பாராட்டி, முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.

கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்ற தவறான நோக்கத்தோடு இல்லாமல், தான் பிடித்த கேட்ச் மூலம் தனது நேர்மையையும், இந்திய அணியின் கண்ணியத்தையும் ராகுல் நிலைநாட்டிவிட்டார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பாடமாக அமையுமா என்பதைக் காட்டிலும் ஹேண்ட்ஸ்கம்புக்கு பாடமாக இருக்கும். கே.எல். ராகுலின் செயலை நெட்டிசன்கள் புகழ்ந்து ,பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in