

என் திறமை மீது நம்பிக்கை வைத்து என்னை 5-வது வீரராக களமிறங்கச் செய்து தன்னம்பிக்கையை வளர்த்தவர் ராகுல் திராவிட் என்று தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டு, ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அளித்துள்ளது.
இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தமிழகத்தின் ஆல்ரவுண்டர் விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இலங்கையில் நடந்த நிடாஹாஸ் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளமுடியாமல் விஜய் சங்கர் சொதப்பியதால் இன்னும் தமிழக ரசிகர்கள் விஜய் சங்கர் மீது கோபத்தோடுதான் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த விஜய் சங்கர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இந்தச் சூழலில் மீண்டும் இந்திய அணிக்கு விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது விவாதப்பொருளாகி இருக்கிறது.
மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளது குறித்து விஜய் சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னுடைய பினிஷிங் திறமை குறித்துத்தான் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. அதைநான் சரி செய்து, தன்னம்பிக்கையுடன் இப்போது இருக்கிறேன். மனரீதியாகவும் வலிமையுடன் இருக்கிறேன். முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதால், என்னால், கடைசிநேரத்தில் களமிறங்கி அணிக்குச் சிறந்த பினிஷிங் தர முடியும்.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பல்வேறு அனுபவங்களை நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய திறமையை மேலும் பட்டைதீட்டிக்கொள்ளஅங்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் என் மீதும், என் திறமை மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். என்னால் 5-வது வரிசையில் களமிறங்கி சிறப்பாக பேட் செய்ய முடியும், பினிஷிங் கொடுக்க முடியும் என்று நம்பினார். அதன்படியே 5-ம் வரிசையில் களமிறங்கி சிறப்பாகச் செயல்பட்டேன், 2 போட்டிகளில் சிறப்பான பினிஷிங் கொடுத்து முடித்துவைத்தேன், மற்ற போட்டிகளி்ல ஆட்டமிழக்காமல் இருந்தேன்.
நியூசிலாந்து ஏஅணிக்கு எதிரான ஆட்டத்தில் 300 ரன்களை சேஸிங் செய்யும் போது நான் 87 ரன்கள் சேர்த்தது, எனக்கு அதிகமான நம்பிக்கையை அளித்தது, மற்றொரு போட்டியில் 60 ரன்கள் சேர்த்தேன்.
அனைத்துப் போட்டிகளிலும் 5-ம் வரிசையில் களமிறங்கி விளையாடியபோது, அணிக்காக 150 முதல் 160 ரன்கள் சேர்த்துக்கொடுத்திருக்கிறேன். விஜய் ஹசாரே கோப்பையில் 5 ஓவர்கள் வரையிலும், ரஞ்சிக்கோப்பைத் தொடரில் அதைக்காட்டிலும் அதிகமான ஓவர்கள் வீசி மனதளவில் தயாராக இருக்கிறேன்.
நான் இப்போதுவரை உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறுவேனா என்பதைப் பற்றி நினைக்கவில்லை. அது குறித்து நினைக்கத் தொடங்கிவிட்டால், நம்மால் சுதந்திரமாக விளையாட முடியாது. நீண்டகாலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்து அதைத் தக்கவைக்க தொடர்ந்து தீவிரமான பயிற்சிகளில் ஈடுபடுவேன்
இவ்வாறு விஜய் சங்கர் தெரிவித்தார்.