

நவிமும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 21-வது ஓவரில் பீல்டிங்கின் போது இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவலுக்கு முழங்கால் மற்றும் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் திரும்பிவரவில்லை. ஸ்கேன் பரிசோதனையில் பிரதிகா ராவலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
25 வயதான பிரதிகா ராவல் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்தார். 6 ஆட்டங்களில் அவர், 51.33 சராசரியுடன் 308 ரன்கள் சேர்த்திருந்தார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசியிருந்தார். மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை விரைவாக குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இந்நிலையில் பிரதிகா ராவல் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏற்கெனவே விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கவில்லை. தற்போது பிரதிகா ராவல் முக்கியமான கட்டத்தில் விலக நேரிட்டுள்ளது. இந்நிலையில் பிரதிகா ராவலுக்கு பதிலாக ஷபாலி வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.