அபிஷேக் சர்மா அதிரடி: இந்தியா வெற்றி | IND vs ENG முதல் டி20

அபிஷேக் சர்மா அதிரடி: இந்தியா வெற்றி | IND vs ENG முதல் டி20
Updated on
2 min read

கொல்கத்தா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்தியா. சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் விக்கெட்டை கொடுத்தார்.

தொடர்ந்து களத்துக்கு வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து 84 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அபிஷேக் சர்மா, 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் ரஷீத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. திலக் வர்மா 19 ரன்கள், ஹர்திக் 3 ரன்கள் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 2 மற்றும் ரஷீத் 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

முன்னதாக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரில் சால்ட் விக்கெட்டை கைப்பற்றினார் அர்ஷ்தீப் சிங். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது ஓவரில் டக்கெட் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹாரி புரூக் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் இணைந்து 48 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புரூக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன்னும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓவர்டன் 2, அட்கின்சன் 2 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இங்கிலாந்து அணிக்கு களத்தில் நம்பிக்கை கொடுத்த பட்லர் 68 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 17-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் 12 மற்றும் மார்க் வுட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணிக்காக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்தின் மார்க் வுட் ரன் அவுட் ஆனார். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1-0 என இந்தியா இப்போது முன்னிலை வகிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in