“ஆஸி., டெஸ்ட் தொடரை வெல்வதில் கவனம் வையுங்கள்” - இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்

“ஆஸி., டெஸ்ட் தொடரை வெல்வதில் கவனம் வையுங்கள்” - இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்
Updated on
1 min read

மும்பை: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை 4-0 என இந்தியா வென்றாக வேண்டி உள்ளது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்திய அணியால் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டின் மண்னில் 4-0 என்ற கணக்கில் வீழ்த்த முடியாது என நான் நினைக்கிறேன். எனது கணிப்பை இந்தியா மாற்றினால் நிச்சயம் எனக்கு அதில் சந்தோஷம் தான். இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல வாய்ப்புள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஆஸ்திரேலிய மண்னில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் மட்டும் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும். 1-0, 2-0, 3-0, 2-1, 3-1 என எப்படி வென்றாலும் பரவாயில்லை. ஆனால், வெல்ல வேண்டும். அது நிச்சயம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும்.

ரோஹித் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் பும்ராவை இந்த தொடரில் கேப்டனாக நியமிக்கலாம். ரோஹித், கடைசி மூன்று போட்டிகளில் விளையாடினாலும் அணியில் வீரராக மட்டும் ஆடலாம்.” என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in