

ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள்இடையிலான கடைசி மற்றும் 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது நாளான நேற்று போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 85.1 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 58, கேப்டன் ஷான் மசூத் 57, சல்மான் ஆகா 54 ரன்கள் சேர்த்தனர். அப்துல்லா சபிக் 0,பாபர் அஸம் 31, சவுத் ஷகீல் 16, முகமது ரிஸ்வான் 29, குர்ராம் ஷெசாத் 12, முகமது அலி 2, அப்ரார் அகமது 9 ரன்களில் நடையை கட்டினர்.
வங்கதேச அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்களையும், வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள்எடுத்திருந்தது. ஷத்மான்இஸ்லாம் 6 ரன்களும், ஸாகிர் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.