ஹரீஸ் ரவூஃப்
ஹரீஸ் ரவூஃப்

அமெரிக்காவில் ரசிகர்களுடன் மல்லுக்கட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹரீஸ் ரவூஃப்!

Published on

புளோரிடா: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்நிலையில், அமெரிக்காவில் ரசிகர்களுடன் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவூஃப் மல்லுக்கட்டிய வீடியோ வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் ஹரீஸ் ரவூஃப், தனது மனைவியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு சற்று தொலைவில் இருந்த சிலர் ஏதோ சொல்லி உள்ளனர். அதை கவனித்த ரவூஃப், அவர்களை நோக்கி ஆவேசமாக செல்கிறார். அவரது மனைவி அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

‘அவர்கள் இந்தியர்கள்’ என ரவூஃப் சொல்வது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. ‘இல்லை நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்’ என்ற குரலும் கேட்கிறது. இருவரையும் அங்கு இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர். இந்த தொடரில் தனது அணிக்காக 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இதில் இந்திய அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளிடம் தோல்வியை தழுவியது பாகிஸ்தான். அதனால் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளது. அந்த அணி செவ்வாய்க்கிழமை (இன்று) அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புகிறது. பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டினை பலரும் விமர்சித்து வருகின்றனர். கேப்டன் பாபர் அஸம், அணி வீரர்கள் என அனைவரும் இந்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அவர்களை விமர்சித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in