

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் இன்று விளையாடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், அந்த அணி இந்த முறை ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் விராட் கோலியை நான் ஏலத்தில் எடுத்த போது இதை விட சிறந்த தேர்வை என்னால் எடுத்திருக்க முடியாது என நினைத்தேன். இந்த முறை ஆர்சிபி கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு சிறப்பாக அமைந்துள்ளதாக எனது உள்ளுணர்வு சொல்கிறது. முன்னோக்கி செல்லுங்கள். பெஸ்ட் ஆஃப் லக்” என தனது ட்வீட்டில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ல் 111.6 மில்லியன் டாலர்களுக்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள ஐபிஎல் அணியின் உரிமத்தை பெற்றார். கடந்த 2008-ல் விராட் கோலியை தனது அணிக்காக விஜய் மல்லையா வாங்கி இருந்தார். அப்போது யு19 இந்திய அணியை வழிநடத்தி உலகக் கோப்பை பட்டம் வென்ற கேப்டனாக கோலி இருந்தார். அவரை 30,000 டாலர்களுக்கு ஆர்சிபி அணி வாங்கியது. அது முதல் இந்த நாள் வரையில் கோலி, ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
அந்த அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. மூன்று முறை இரண்டாம் இடத்தில் தொடரை நிறைவு செய்துள்ளது. ஐந்து முறை பிளே ஆஃப் சுற்றில் விளையாடி உள்ளது.
ஆர்சிபி அணிக்காக 251 போட்டிகளில் விளையாடி உள்ளார் கோலி. மொத்தமாக 7,971 ரன்களை குவித்துள்ளார். நடப்பு சீசனில் 708 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.