Published : 08 May 2024 05:40 AM
Last Updated : 08 May 2024 05:40 AM

அழுத்தமான சூழலில் ரோஹித் சர்மா நல்ல முடிவுகளை எடுக்கக்கூடியவர்: சொல்கிறார் யுவராஜ் சிங்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இறுதி சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்தது. மேலும் டி 20 உலகக் கோப்பையில் கடந்த 2022-ம் ஆண்டு அரை இறுதி வரை சென்றிருந்தது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் ஒருமுறை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

இந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தூதராக உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், ஐசிசி இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா இருப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்திய அணிக்கு நல்ல கேப்டன், அழுத்தத்தின் கீழ் விவேகமான முடிவுகளை எடுக்கக்கூடிய கேப்டன் தேவை என்றே கருதுகிறேன். அந்த வகையில் ரோஹித் சர்மாவே கேப்டனாக அணியை வழிநடத்த வேண்டும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றபோது ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார். அவர், கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இந்தியாவுக்கு கேப்டனாக அவரைப் போன்ற ஒருவர் தேவை என்று நினைக்கிறேன். ரோஹித் சர்மா அதிக அளவிலான வெற்றிகளை பெற்றிருந்தாலும் இன்னும் அவர், மாறவில்லை.

அதுதான் ரோஹித் சர்மாவின் அழகு. எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார். ஆடுகளத்தில் மிகச்சிறந்த கேப்டனாக இருப்பார். கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர். ரோஹித் சர்மாவை உலகக் கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை பதக்கத்தையும் அவர் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். இவ்வாறு யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x