Last Updated : 27 Apr, 2024 03:26 PM

 

Published : 27 Apr 2024 03:26 PM
Last Updated : 27 Apr 2024 03:26 PM

விழுப்புரத்தில் இருந்து முதல் வீரர்... - என்சிஏ கிரிக்கெட் முகாமில் 16 வயதான அரவிந்த் மன்னா பங்கேற்பு

என்சிஏ சீருடையில் கிரிக்கெட் வீரர் அரவிந்த் மன்னா.

விழுப்புரம்: பிசிசிஐ நடத்தும் என்சிஏ பயிற்சி முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து முதல் வீரராக 16 வயது மாணவர் சவுமோதீப் அரவிந்த் மன்னா பங்கேற்றுள்ளார்.

விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே சென்னை பிரதான சாலையில் வசிப்பவர் சவுகாத்தா மன்னா. இவரது மகன் சவுமோதீப் அரவிந்த் மன்னா (16). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி உள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் 4 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து வந்துள்ளார். மகனின் ஆர்வத்தை உணர்ந்த, அவரது பெற்றோரும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். பள்ளிப்படிப்புடன் கிரிக்கெட் பயிற்சியிலும் அரவிந்த் மன்னா கவனம் செலுத்தினார்.

விழுப்புரம் ராகவன்பேட்டையில் இயங்கும் டிரீம்ஸ் அகாடமி கிரிக்கெட் பயிற்சி நிலையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். பந்துவீச்சில் வலது கை லெக் ஸ்பின்னராகவும் திகழ்ந்தார். இதன்மூலம், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான விழுப்புரம் மாவட்ட அணியில் இடம் பிடித்தார். இருப்பினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை.

இதனால், தனது பயிற்சியாளர் டி.சுரேஷ் உதவியுடன் பயிற்சியை தீவிரப்படுத்தி, பேட்டிங்கில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இதன் காரணமாக, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான விழுப்புரம் மாவட்ட அணியில் இடம்பிடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கி திறமையை வெளிப்படுத்தினார். இதன் பயனாக ரவுண்ட் ராபின், ஒருங்கிணைந்த மாவட்ட அணி என அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறி, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழக அணியில் இடம் பிடித்தார். பெங்களூருவில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிராக களம் இறங்கி 149 ரன்களை குவித்து அசத்தினார்.

இதன் எதிரொலியாக பிசிசிஐ நடத்தும் என்சிஏ-வுக்கு (நேஷனல் கிரிக்கெட் அகாடமி) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் ஒரு மாத பயிற்சியில் பங்கேற்றுள்ளார். பயிற்சிக்கு பிறகு மண்டல அளவில் நடத்தப்படும் பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டால், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அரவிந்த் மன்னா கூறும்போது, “எனது தாய், தந்தை மற்றும் டிரீம்ஸ் பயிற்சியாளர் டி.சுரேஷ் ஆகியோரது அர்ப்பணிப்பு காரணமாக, இந்த நிலையை எட்டியுள்ளேன். எனது முழு திறமையும் வெளிப்படுத்தி, இந்திய அணியில் இடம்பிடித்து தமிழகத்துக்கும், விழுப்புரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்ப்பேன்” என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து என்சிஏ-வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரர் சவுமோதீப் அரவிந்த் மன்னா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கிரிக்கெட் பயணம் வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x