Published : 24 Apr 2024 12:01 PM
Last Updated : 24 Apr 2024 12:01 PM

கம்மின்ஸ் சொல்லிச் செய்ததை சொல்லாமல் செய்த ஸ்டாய்னிஸ்!

2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி பலருக்கும் மறக்க வேண்டியதாயிற்று. ஆனால் கம்மின்ஸ் தலைமை ஆஸ்திரேலிய அணிக்கு அன்றைய தினம் எதிர்பாராத உற்சாக தினம், உலக சாம்பியன்கள் தினமாக மாறியது. அதாவது ஒரு லட்சத்து 15 ஆயிரம் அகமதாபாத் ரசிகர்களை வாயடைக்கச் செய்வேன் என்றார் கம்மின்ஸ், சொன்னார் செய்தார். அதேபோல் நேற்று சப்த மண்டலமாகத் திகழும் சிஎஸ்கே ரசிகர்களை வாயடைக்கச் செய்தார் ஸ்டாய்னிஸ். கம்மின்ஸ் சொல்லிச் செய்ததை சொல்லாமல் செய்தார் ஸ்டாய்னிஸ்.

முதல் முறையாக ஸ்டாய்னிஸ் நம்பர் 3-ல் லக்னோ அணிக்காக இறங்கினார். 63 பந்துகளில் 124 ரன்களை விளாசினார். ஒரு கட்டத்தில் முடியவே முடியாது என்று இருந்த சேஸிங்கை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார்.

சிஎஸ்கே ரசிகர்களை மவுனமாக்குவது கடினம் என்றார் கே.எல்.ராகுல். ஆனால் நேற்று அதுதான் நடந்தது. நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் எதிரணியினரையும் பாராட்டி கரகோஷம் செய்து நட்பு பாராட்டும் சென்னை ரசிகர்கள், சிஎஸ்கே என்று வரும்போது மிகவும் பிராந்திய வெறியுடன் போட்டிகளைப் பார்க்கின்றனர். ஸ்டாய்னிஸ் விளாசும் போது அவரைப் பாராட்டி கரகோஷம் செய்யவில்லை. மாறாக, பேரமைதி காத்தது வங்கதேச ரசிகர்களை நினைவூட்டியது.

ஸ்டாய்னிஸ் நேற்றுதான் சரியான டவுன் ஆன 3ம் நிலையில் இறங்கினார். பிக் பாஷ் லீகில் பெரிய பெரிய ஹிட்களை அடிக்கும் ஸ்டாய்னிஸ் இங்கு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று நாம் நினைக்கும் தருணத்தில் நேற்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கான பார்மை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு அணிக்காக சிஎஸ்கேவுக்கு எதிராக காட்டினார், அதே டவுன் ஆர்டரில்!

தோனியின் மட்டை வீச்சை ரசித்தே, அதன் ஓசைக்குப் பழகியே வளர்ந்த சிஎஸ்கே ரசிகர்கள், நேற்று ஸ்டாய்னிஸ் மட்டை எழுப்பிய சப்தத்தை ரசிக்க முடியாமல் தவித்தனர். ஸ்டாய்னிஸ் ஷாட்களை ஆடும்போது எழுந்த மட்டையின் ‘சப்தம் சேப்பாக்கத்தையும் தாண்டி கேட்டிருக்கலாம். ஏனெனில் 'சிஎஸ்கே ரசிகர்கள் அசாத்தியமாக அமைதி காத்ததே’ என்று கிரிக் இன்போ கிரிக்கெட் எழுத்தாளர் மிகச்சரியாகவே மதிப்பிட்டுள்ளார்.

மொயின் அலியை அடித்த போதும், சிஎஸ்கேவின் ஒரே நல்ல பவுலர் பதிரனாவின் பந்துகளை ஸ்டாய்னிஸ் அடித்து நொறுக்கிய போதும் சிஎஸ்கே ரசிகர்கள் பேரமைதி காத்தனர். இவர்களுக்கு தோனி பெயரைச் சொல்ல வேண்டும். எந்த அணி வேண்டுமானாலும் சிஎஸ்கேவை வெல்லலாம். ஆனால் வெல்லும் அணியின் கேப்டனும் கூட நாங்கள் தோனியினால்தான் வென்றோம் என்று கூற வேண்டும்.

நன்றாக வீசும் எதிரணி பவுலர், ஆட்டத்திற்கு முன்னால் தோனியிடம் பேசினேன் அவர்கொடுத்த டிப்ஸ்தான் என்று சொல்ல வேண்டும் அல்லது அது போன்ற செய்திகளில் லயிக்க வேண்டும். இதுதான் சிஎஸ்கே ரசிகத்தன்மை. இது கிரிக்கெட் ஆட்டத்தை மறந்த தனிமனித வழிபாட்டு மனோபாவமே. ஒருமுறை குல்தீப் யாதவ் இப்படித்தான் கூறினார். தோனியின் அறிவுரைதான் தான் நன்றாக வீசியதற்குக் காரணம் என்றார். சரி என்ன அறிவுரை என்று கேள்வியாளர் கேட்ட போது, ‘நன்றாக வீசு என்றார்’ என்று குல்தீப் சொன்னதை என்னவென்று சொல்வது?.

இவர்களது இந்த தனிமனித வழிபாட்டு வெறி தோனி ஒரு போட்டியில் இறங்கும்போது ரஜினி பாடலை டிஜே ஒலிக்க விட்ட போது எழுந்த ஆரவாரத்தில் தெரிந்தது. பவுண்டரியில் நின்று கொண்டிருந்த ஆந்த்ரே ரஸல் காதுகளைப் பொத்திக் கொண்டார் என்பதையும் நாம் பார்த்தோம். இது போதாதென்று நேற்று சிம்புவின் படமான 'பத்து தல'யில் வரும் நீ சிங்கம்தான் என்ற பாடலை ஒலிபரப்பி வெறியேற்றினர். தோனி ரசிகப்படை அவருக்கு இயல்பாக அமைந்த ரசிகப்படை போன்று தெரியவில்லை.

கடைசியில் தோனி அடித்த பவுண்டரியில் கூச்சலின் உச்சத்திற்குச் சென்ற ரசிகப்படையும் சரி, தோனியும் சரி கடைசியில் ஸ்டாய்னிஸின் வின்னிங் ஷாட் பவுண்டரிக்குச் செல்வதை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x