

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இந்தியாவுடனான தனது பயிற்சி குறித்தும் தோனி குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக 2008 முதல் 2011 வரை நீடித்தார். இவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில்தான் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது.
இந்திய அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் இருக்கும்போது ஒவ்வொரு வீரரின் ஆட்டத்திறன் செயல் திறனுக்குப் பின்னால் ஒரு சக்தியாக அவர் அனைவராலும் அறியப்பட்டார்.
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனுபவத்தை கேரி பகிர்ந்திருக்கிறார். "ஒரு அணி நெருக்கடியில் இருக்கும்போது தலைவன் எத்தகைய பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு தோனிதான் சிறந்த உதாரணம்'' என்றார்.
இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரிய விஷயம் என்று என்னைப் பற்றி தோனி பெருமையுடன் கூறினார் என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்தார்.