Published : 29 Mar 2024 06:55 AM
Last Updated : 29 Mar 2024 06:55 AM

பெங்களூரு - கொல்கத்தா இன்று மோதல்

கோப்புப்படம்

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேவிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் அடுத்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அற்புதமாக பேட் செய்து 77 ரன்கள் விளாசியிருந்தார். அவரிடம் மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸை வெளிப்படக்கூடும்.

இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி அணிக்கு பலம்சேர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும்விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அனுஜ் ராவத் ஆகியோர் கொல்கத்தா பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். முன்னணி பேட்ஸ்மேன்களான டுபிளெஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார் ஆகியோரிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படவில்லை.

வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட தினேஷ் கார்த்திக்கின் தாக்குதல் ஆட்டமும், இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய மஹிபால் லாம்ரோரின் மட்டை வீச்சுமேபெங்களூரு அணி வெற்றிக்கோட்டை கடக்க உதவியிருந்தது. சொந்த மண்ணில் 2-வது வெற்றியை பதிவு செய்ய வேண்டுமானால் டு பிளெஸ்ஸிஸ் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பார்முக்கு திரும்புவது அவசியம்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அந்தஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் பில் சால்ட் மட்டுமே 54 ரன்கள் சேர்த்து அணிக்கு பலம்சேர்த்தார். ஸ்ரேயஸ் ஐயர் டக் அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டியிருந்தனர்.

ஆட்டத்தின் பிற்பாதியில் ஆந்த்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் விளாசிய 64 ரன்களும் அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரமன்தீப் சிங் சேர்த்த 35 ரன்களும்,ரிங்கு சிங் சேர்த்த 23 ரன்களும்தான் கொல்கத்தா அணி பெரிய அளவிலான இலக்கை கொடுக்க உதவியது. இன்றைய ஆட்டத்தில் இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த இரு ஆட்டங்களிலும் வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிஎஸ்கே அணிக்குஎதிராக விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 38 ரன்களை விட்டுக்கொடுத்த அல்சாரி ஜோசப், பஞ்சாப்அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கைப்பற்றிய நிலையில் 43 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். அவருக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி களமிறங்கக்கூடும்.

கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் சுனில்நரேன் சிறப்பாக செயல்பட்டிருந்தார். 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அவர், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார். அதேவேளையில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 50 ரன்களை தாரைவார்த்திருந்தார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும் 53 ரன்கள் கொடுத்த நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். இதனால் பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x