Published : 27 Mar 2024 08:18 AM
Last Updated : 27 Mar 2024 08:18 AM

இனவெறி பற்றி கேட்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுத வினிசியஸ் ஜூனியர்

வினிசியஸ் ஜூனியர்

மாட்ரிட்: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர். இவர் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில் பிரேசில் - ஸ்பெயின் கால்பந்து அணிகள் இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நேற்று மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான வினிசியஸ் ஜூனியர் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறும் போது, “நான் கால்பந்து விளையாட விரும்புகிறேன், ஆனால் இனவெறி துஷ்பிரயோகம் காரணமாக முன்னேறுவது கடினமாக உள்ளது. இதனால் நான் குறைவாகவே விளையாடுவதாகவே உணர்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசுவதற்கு தடுமாறிய வினிசியஸ் திடீரென கண்ணீர் விட்டு அழுதார். பத்திரிக்கையாளர்கள் ஆறுதல் கூறிய பின்னர் அவர் கூறும்போது, “ஸ்பெயினை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஒருபோதும் தோன்றவில்லை. ஏனென்றால் நான் ஸ்பெயினை விட்டு வெளியேறினால், இனவாதிகள் விரும்புவதை நான் வழங்கியதாகிவிடும்.

நான் இங்கேயே இருப்பேன், ஏனென்றால் அப்போதுதான் இனவாதிகள் எனது முகத்தை மேலும் மேலும் பார்க்க முடியும். நான் ஒரு தைரியமான வீரர், நான் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகிறேன், நாங்கள் நிறைய பட்டங்களை வெல்வோம், இது பலரால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.

கடந்த மே மாதம் லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் - வெலன்சியா அணிகள் மோதின. வெலன்சியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் போது ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் வினிசியஸ் ஜூனியரை இனவெறி வார்த்தைகளால் வசை பாடினர். இதனால் 10 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. கேலி செய்த ரசிகர்களை சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்ததால் வினிசியஸ் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த சீசனில் மட்டும் இது போன்ற 10 நிகழ்வுகள் நடைபெற்றன.

இது தொடர்பாக வினிசியஸ் ஜூனியர் கூறும்போது, இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு விளையாட்டிலும், ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு புகாரையும் நான் கடந்து வருவது மோசமாகிக் கொண்டே போகிறது. தண்டனைகள் இல்லாதது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. இந்த மக்களை நாம் தண்டிக்கத் தொடங்கினால், அவர்கள் தங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்வார்கள் என்று கருத முடியாது.

ஆனால் அவர்கள் பேச பயப்படுவார்கள், அது அரங்கமாக இருந்தாலும் சரி, கேமராக்கள் இருக்கும் இடத்திலும் சரி. இதனால் அந்த மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். நான் அதற்காக தொடர்ந்து போராட விரும்புகிறேன், ஆனால் அது கடினமானது. நான் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பரவாயில்லை. இங்கு வந்ததற்காகவே நான் ஒரு வெற்றியாளர்தான்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x