Published : 22 Mar 2024 04:18 PM
Last Updated : 22 Mar 2024 04:18 PM

தோனி உடனான மாலை நேர சந்திப்பு - சிஎஸ்கே கேப்டன்சியை முன்பே தெரிந்து வைத்திருந்தாரா ருதுராஜ்?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்ட நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் தோனிக்குப் பிறகு கேப்டன்சி தனக்குத்தான் என்பது ஓரளவுக்கு ருதுராஜுக்கு முன்கூட்டியே தெரிதிருந்தது.

வியாழக்கிழமை காலை உணவின் போது தோனி இந்த முறை தான் கேப்டன் இல்லை. ருதுராஜ் தான் கேப்டன்சி என்ற செய்தியை உடைத்து வீரர்களுக்கு அதிர்ச்சியளித்ததாகவும் பிறகு சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் சில பல தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசியிலேயே ருதுராஜை கேப்டனாக்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் செய்திகள் எதுவும் ஜடேஜாவுக்கு நன்றாக அமையவில்லை. மீண்டும் தோனியே கேப்டன்சியை எடுத்துக் கொண்டார். ருதுராஜ் கெய்க்வாட் 2019ல் சிஎஸ்கே அணியில் அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தமானார். 2022-ல் ஆரஞ்சுத் தொப்பி வென்றார். பெரிய ஏலத்திற்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாடை ரூ.6 கோடி தொகைக்கு சிஎஸ்கே தக்கவைத்தது.

குறைந்த ஒப்பந்தத் தொகை கொண்ட ஒரு வீரர் கேப்டனாகியிருப்பதும் அதிசயம்தான். ஐபிஎல் அணிகளின் கேப்டன்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சம்பளத்தையும் ருதுராஜ் சம்பளத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவருக்குக் குறைவு என்பது தெரியவரும்.

எனினும் தோனிக்கு அடுத்தபடி தனக்கு தான் கேப்டன்சி என்பது ஓரளவுக்கு ருதுராஜுக்கு சூசகமாகத் தெரிந்திருந்தது என்று சொல்லப்படுகிறது. பென் ஸ்டோக்ஸை அதிக விலை கொடுத்து சிஎஸ்கே எடுத்ததற்குக் காரணமே கேப்டன்சியை கருத்தில் கொண்டுதான். ஆனால் ஒரு இளம் வீரரை, இந்திய வீரரை கேப்டன்சி பொறுப்பில் வளர்த்தெடுப்பது என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்லது என்ற பார்வையில் யோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

விஜய் ஹசாரே கோப்பை 2022-23 சீசனில் மகாராஷ்ட்ரா அணி தங்களது லீக் போட்டிகளை ராஞ்சியில் ஆடிய போது ருதுராஜ் கெய்க்வாட், ஒவ்வொரு மாலை நேரத்தையும் தோனியுடன் கழித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சந்திப்புகளின் போது சிஎஸ்கே அணி நிர்வாகம் ருதுராஜை எந்த அளவுக்கு சிந்தித்து வைத்துள்ளனர் என்ற ரீதியில் தோனி அவரிடம் பேசியுள்ளார். அதாவது தனக்குப் பிறகு ருதுராஜ் தான் என்ற அளவுக்கு சிஎஸ்கே இவர் மீது நம்பிக்கை வைத்துப் பார்த்து வருவதாக தோனி ருதுராஜிடம் கூறினாராம்.

அந்த விஜய் ஹசாரே தொடரிலேயே தனது கேப்டன்சி திட்டங்களை ருதுராஜ் செயல்படுத்தத் தொடங்கி விட்டார். இந்த முறை ருதுராஜ் சென்னைக்கு கிளம்பிய போதே தெரியும் அவர் சிஎஸ்கே கேப்டனாகி விடுவார் என்று ருதுராஜ் கெய்வாட்டின் நண்பர் ஒருவர் முன்னணி ஆங்கில நாளேட்டில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வீரர்களிடையே தொடர்புபடுத்தல், அணி கூட்டத்தில் பேசுதல், களத்தில் வழிநடத்துதல், கள வியூகம் உள்ளிட்ட முடிவுகளை எடுப்பதில் வல்லமை என்று ருதுராஜை, இதற்காகவென்றே வளர்த்து எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பெஸ்ட் ஆஃப் லக் ருதுராஜ்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x