Published : 04 Mar 2024 08:04 AM
Last Updated : 04 Mar 2024 08:04 AM

எம்.எஸ்.தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விளக்கம்

கோப்புப்படம்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து வீரர்களுக்கு சவால் அளித்து வருகின்றனர். இந்த தொடரின் 3-வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி 46 ரன்கள் அடித்த துருவ் ஜூரெல் 4-வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்துஇந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் அவர் அபாரமாக விளையாடி 90 ரன்களைக் குவித்தார். சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரெலுக்கு, சுனில் கவாஸ்கர் உட்பட பல முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் புகழாரம் சூட்டினர்.

சுனில் கவாஸ்கர் கூறும்போது, “இங்கிலாந்துக்கு எதிரான 3-வது, 4-வது டெஸ்ட் போட்டிகளில் துருவ் ஜூரெல் அபாரமாக விளையாடினார். 4-வது போட்டியின்போது அழுத்தமான சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் விளையாடிய துருவ்ஜூரெல் அனைவரது மனங்களையும் வென்றார். அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார்" என்று பாராட்டினார். சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு எதிர்மறையான சில விமர்சனங்கள் எழுந்தன.

இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரெல் திறமையான வீரராக இருந்தாலும் அனைவராலும் எம்.எஸ். தோனியாக முடியாது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் துருவ் ஜூரெல் குறித்து தான் வெளியிட்ட கருத்தை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டதாக கவாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரெல் சூழ்நிலைக்கு ஏற்றது போல் சிந்தித்து பேட்டிங் செய்வது தோனியை போன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது. அவருடைய வயதில் தோனியும் அதுபோன்ற சூழ்நிலையில் இதே விழிப்புணர்வுடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதனால்தான் தோனி போல ஜூரெல் செயல்படுவதாக நான் கூறினேன்.

யாரும் எம்.எஸ். தோனியாக முடியாது. தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இங்கே ஒரே ஒரு தோனிதான் இருப்பார். ஆனால், தோனி செய்த பல்வேறு சிறப்பான பணிகளில் துருவ் ஜூரெல் ஒன்றை செய்தால் கூட அது இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தானதாக அமையும். இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x