Published : 29 Nov 2023 06:02 PM
Last Updated : 29 Nov 2023 06:02 PM

சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வாதம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளது. துறைமுகம், ராணுவம், கடற்படை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அனைத்த பாதுகாப்பு அம்சங்களுடன் உரிய அனுமதிகளை பெற்றே இந்த பந்தயம் நடத்தப்படவுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் தாக்கல் செயத் பொதுநல மனுவில், “பார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்தப் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுக ளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் தலைமையிலான அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், “இந்த கார் பந்தயத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையில் நடத்துவதால் பெரிய அளவில் சிரமம் ஏற்படும். பந்தயம் நடைபெறும் சாலைகளில் பன்னோக்கு மருத்துவமனை, ராணுவ தலைமையிடம் ஆகியவை உள்ளன. சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும். இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும்.

மேலும், இந்த பந்தயத்தை நடத்த எந்த முன் அனுமதியும் பெறவில்லை. ராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய விதிகளில் இடமில்லை. பந்தயத்துக்காக ராணுவ அதிகாரிகளிடமும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த பந்தயம் நடந்தால் போக்குவரத்து அந்தப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு வடசென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்" என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், "இந்த கார் பந்தயத்தை நடத்துவதற்கான உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளது. இந்த பந்தயம் ஏற்கெனவே நொய்டா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெறும்.
மனுதாரர் கூறுவதுபோல் ஒலி மாசு அதிகம் இருக்காது.

கார்களின் சத்தத்தை கட்டுப்படுத்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சாமானிய மக்களும் கார் பந்தயத்தை காணும் வாய்ப்பை ஏற்படுத்தவே, பந்தயத்தை இந்த இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, துறைமுகம், ராணுவம், கடற்படை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அனைத்த பாதுகாப்பு அம்சங்களுடன் உரிய அனுமதிகளை பெற்றே இந்த பந்தயம் நடத்தப்படவுள்ளது" என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x