Published : 29 Nov 2023 04:16 PM
Last Updated : 29 Nov 2023 04:16 PM

“இனிதான் சவால்கள். ஆனாலும்...” - பதவி நீட்டிக்கப்பட்ட பயிற்சியாளர் ராகுல் திராவிட் பகிர்வு

ராகுல் திராவிட் | கோப்புப்படம்

மும்பை: நடந்து முடிந்த உலகக் கோப்பையுடன் நிறைவடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிசிசிஐ-யின் கோரிக்கையை ராகுல் திராவிட் ஏற்றுக் கொண்டார். ஆனால், நீட்டிப்பு காலம் பற்றிக் கூறப்படவில்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை திராவிட்டின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

முன்பெல்லாம் 2 ஆண்டுகள், ஓராண்டு என்று நீட்டிக்கப்படும் போதே வெளியுலகுக்கு அறிவிக்கப்படும். இப்போதுள்ள பிசிசிஐ-யில் எல்லாமே மர்மம்தான். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த மூடுமந்திரமாக எதைத்தான் வைத்துக் கொள்வது என்றில்லாமல் எல்லாவற்றையும் வைத்துக் கொள்கிறார்கள். நல்ல வேளை யாருக்கும் சொல்லாமல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில்லை. அதுவரை ஆறுதல்தான்.

ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் திராவிட் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 2021-ல் பொறுப்பேற்றார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்றிருக்காவிட்டாலும் ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2022, டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றது இந்திய அணி.

2023, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரன்னர்கள், 2023, உலகக் கோப்பையிலும் ரன்னர்கள். குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடிய விதம் அனைவரையும் பெரிதும் ஈர்த்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிட்சில் குளறுபடி செய்ததும் கடும் அரசியல் நெருக்கடியினாலும் இந்திய அணி தோற்றது.

கடந்த 2 ஆண்டுகளாக ராகுல் திராவிட் இந்திய அணிக்குள் ஏற்படுத்திய ‘அமைப்பு’ தொந்தரவுக்குள்ளாக்கி விடக் கூடாது என்று அவரையே நீட்டித்துள்ளனர். தனது பதவி நீட்டிப்பு குறித்து ராகுல் திராவிட் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகள் மறக்க முடியாதது. எல்லோருடனும் உயர்வையும் கண்டோம், தாழ்வையும் கண்டோம். இந்தப் பயணத்தில் வீரர்கள் காட்டிய சகோதரத்துவமும் ஆதரவும் அபாரமானது. ஓய்வறையில் நாங்கள் ஏற்படுத்தியுள்ள கலாசாரம் உண்மையில் பெருமை கொள்ளத்தக்கது. வெற்றியோ தோல்வியோ உறுதியுடன் நிற்கும் ஒரு பண்பாடு இது. நம் அணியிடம் இருக்கும் திறமைகள், புத்திசாலித்தனங்கள் தனித்துவமானவை. நாங்கள் கொண்டு வந்தது என்னவெனில் சரியான நிகழ்முறை மற்றும் தயாரிப்புகளில் கறார் தன்மை ஆகியவை ஆட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளில் நிச்சயம் தாக்கத்தை செலுத்தும் என்பதே.

இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது தொலைநோக்குப் பார்வையை ஆதரித்ததற்காகவும், என் திட்டங்களுக்கும் யோசனைகளுக்கும் ஆதரவு வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அதன் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பயிற்சியாளர் என்றால் வீட்டை விட்டு நீண்ட காலம் தள்ளி இருக்க வேண்டும், ஆகவே, எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும், அவர்களது பொறுமையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

திரைக்குப் பின்னால் அவர்களின் ஆதரவு இல்லையெனில் இந்தப் பயணம் நினைவுகூரத்தக்கதாக இருந்திருக்காது. ஆகவே, குடும்பத்தினரின் ஆதரவு மதிப்புக்குரியது. உலகக் கோப்பைக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கடும் சவால்கள் உள்ளன. ஆனால், சிறப்பானவற்றை தொடர்ந்து செய்வதற்கான எங்களது நாட்டம் குறையவே குறையாது” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x