ODI WC 2023 | “அந்தப் போட்டியை நாங்கள் வென்றிருந்தால் கதையே வேறு” - பாபர் அஸம்

பாபர் அஸம்
பாபர் அஸம்
Updated on
1 min read

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி முடித்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்தது.

“எங்களது செயல்பாடு மிகவும் ஏமாற்றம் தருகிறது. நாங்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் கதையே வேறாக இருந்திருக்கும். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் தவறு செய்துள்ளோம். எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த தவறினர். அது ஆட்டத்தின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை மறுப்பதற்கு இல்லை.

நாங்கள் இது குறித்து ஒன்றாக கலந்து பேசி விவாதிக்க உள்ளோம். இதில் இந்த தொடரில் எங்களது பாஸிட்டிவ் மற்றும் செய்த தவறுகளை குறித்து விவாதிப்போம். கேப்டன்சியில் எனது கள அனுபவத்தை பயன்படுத்துவேன்” என பாபர் தெரிவித்தார்.

இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி இருந்தது. அதே நேரத்தில் 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதன் காரணமாக தொடரில் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in