Published : 07 Nov 2023 04:25 PM
Last Updated : 07 Nov 2023 04:25 PM

அன்று முஜீபுர் ரஹ்மானுக்கு எதிராக ஏன் வங்கதேசம் ‘டைம்டு அவுட்’ கேட்கவில்லை? - நெட்டிசன்கள் கேள்வி

ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியில்லாததால் தான் இறங்கிய பிறகும் முதல் பந்தை சந்திக்க கால தாமதம் ஆனதன் காரணமாக இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார். வங்கதேச முறையீட்டினால் வரலாற்றில் முதல்முறையாக டைம்டு அவுட் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதே வங்கதேசம் அன்று ஆப்கனுக்கு எதிராக விளையாடும்போது காலதாமதம் செய்த முஜீபுர் ரஹ்மானுக்கு எதிராக ஏன் டைம்டு அவுட் அப்பீல் செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்றைய வங்கதேச - இலங்கை மோதலின்போது 25-வது ஓவரில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அவர் வெளியேறிய பிறகு புதிய பேட்ஸ்மேனாக மேத்யூஸ் இறங்கி தனது முதல் பந்தை எதிர்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். மேத்யூஸின் ஹெல்மெட் பட்டை உடைந்ததால் கால தாமதம் ஆனது.

பந்தை எதிர்கொள்ள ஐ.சி.சி ப்ளேயிங் கண்டிஷன்ஸ் அனுமதிக்கும் நேரத்தை விட மேத்யூஸ் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், வங்கதேச கேப்டன் ஷகிப் டைம்ட் அவுட்டிற்கு விதிகளின்படி முறையிட்டார். முறையீட்டை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்ட கள நடுவரின் கோரிக்கைகளை ஷகிப் அல் ஹசன் பொருட்படுத்தவில்லை. இறுதியில் மேத்யூஸ் வெளியேற்றப்பட்டார். எவ்வாறாயினும், இதே உலகக் கோப்பைத் தொடரில் அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இதே வங்கதேசம் முஜீபுர் ரஹ்மானுக்கு எதிராக டைம்டு அவுட்டுக்கு முறையிட வாய்ப்பு கிடைத்தபோதும் வங்கதேசம் முறையிடவில்லை. இது ஏன் என்பதுதான் இப்போதைய கேள்வியே.

தர்மசாலாவில் நடந்த அந்த ஆட்டத்தில், ரஷித் கானின் விக்கெட்டைத் தொடர்ந்து முஜீப் 35-வது ஓவரில் இறங்கினார் முதல் பந்தை எதிர்கொள்ள தயாரானார், பீல்டர்களும் பந்து வீச்சுக்கான இடத்தில் இருந்தனர். வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹிதி ஹசன் மிராஸ் பந்தைவீச வரும் முன் முஜீபுர் ரஹ்மான் ஆட்டத்தை நிறுத்தினார். காரணம் அவர் தன் அப்டமன் கார்டை மறந்து வைத்துவிட்டார். இதையடுத்து மீண்டும் அப்டமன் கார்டு வைத்துக்கொண்டு களத்துக்குள் பேட்டிங் செய்யவந்தவர், அதன்பிறகே முதல் பந்தை சந்தித்தார். ஆனால் அப்போது வங்கதேசம் டைம்டு அவுட் அப்பீல் செய்யவில்லை.

மாறாக, இலங்கையின் மேத்யூஸ் இதேபோல் ஹெல்மெட் பிரச்சினையை சரிசெய்தபோது மட்டும் வங்கதேசம் மேல்முறையீட்டிற்கு செல்ல முடிவுசெய்தது. மேலும் டைம்டு அவுட் முறையீட்டிலிருந்து பின்வாங்கவும் மறுத்தது. இது ஏன் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

ஏன் முறையீடு செய்தீர்கள் என்று ஷகிப் அல் ஹசனிடம் நேற்றைய போட்டி முடிந்து கேட்டபோது, “அந்த சமயத்தில் நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் ஃபீல்டர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து நான் நடுவரிடம் முறையிட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேனா அல்லது திரும்ப பெறுவேனா என என்னிடம் நடுவர்கள் கேட்டார்கள். இந்த வகை அவுட் கிரிக்கெட் விதிகளில் உள்ளது. அது சரியா, தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக நான் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது. இது குறித்த விவாதங்கள் இருக்கும். ஆனால், அது விதிகளில் உள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதில் எனக்கு கவலையில்லை” என போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.

ஆனால், ஏஞ்செலோ மேத்யூஸ், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த செயல் ஒரு ‘டிஸ்கிரேஸ்’ என்று வர்ணித்தார். நாமெல்லாம் இந்த அழகான கிரிக்கெட் ஆட்டத்தின் தூதர்கள் என்பதை ஷகிப் அல் ஹசன் மறந்து விட்டார் எனவும் விமர்சித்தார். இந்தப் போட்டி முடிந்த பின் கடைசியில் வங்கதேச வீரர்களுக்கு இலங்கை வீரர்கள் கைக்கொடுக்க மறுத்தனர்.

இதற்கிடையே, நான்காவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்கின் முடிவை ஏஞ்செலோ மேத்யூஸ் வீடியோ ஆதாரம் வெளியிட்டு மறுத்துள்ளார். அந்த வீடியோவில் சமரவிக்ரமா ஆட்டமிழந்ததற்கும் தனது ஹெல்மெட் ஸ்ட்ராப் உடைவதற்கும் இடையே ஆன நேரம் ஒரு நிமிடம் 55 விநாடிகளே, இதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது என்று மேத்யூஸ் கோரியுள்ளார். விதிகளின்படி, 2 நிமிடத்துக்கு இன்னும் 5 நொடிகள் மீதமுள்ளன என்பதை அந்த வீடியோவில் விவரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x