

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை, நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் நெதர்லாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறும்போது, ‘‘இந்த உலகக் கோப்பை தொடரானது பல்வேறு சுவாரஸ்யமான முடிவுகளை தந்து வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அந்த அணி 140 ரன்களுக்கு 7 விக்கெட் இருந்தபோது போராடி பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றதை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
நெதர்லாந்து அணி வீரர்கள் எளிதில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களை அழுத்தத்துக்கு கொண்டு வந்து களத்தில் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நெதர்லாந்து அணிக்கு எனது பாராட்டுக்கள்’’ இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.