Published : 09 Sep 2023 11:47 AM
Last Updated : 09 Sep 2023 11:47 AM

IND vs PAK | பாக். வேகப்பந்து வீச்சை நம் பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் சவால்: ஆகாஷ் சோப்ரா

கோப்புப்படம்

மும்பை: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு கூட்டணியை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் இந்த ஆட்டத்தில் நிறைந்துள்ள சவால் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முதல் சுற்றில் இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின.

நாளை (செப்.10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-4 சுற்றில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்தப் போட்டி மழை காரணமாக இடையூறுகளை சந்தித்தால் ‘ரிசர்வ டே’-வான திங்கட்கிழமை அன்று போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள பிரேமதேசா கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் டீசென்டாக இருக்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருப்பது போல ஆடுகளம் ரன் குவிப்பதற்கு ஏதுவானதாக ஃப்ளேட் பிட்ச் ஆக இருக்காது. வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் கைகொடுக்கும். அது இந்தப் போட்டிக்கு சுவாரஸ்யம் சேர்க்கும். இதில் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு உள்ள பெரிய சவாலே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவுஃப் ஆகியோரை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் தான் உள்ளது.

குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இதனை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில், தார் சாலை போல உள்ள லாகூர் ஆடுகளத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் எதிரணியை அச்சுறுத்தியதோடு, விக்கெட்டும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவர்கள் வரை இந்திய அணி விக்கெட் இழக்காமல் இருந்தால் அது பெரிய சாதகமாக அமையும்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x