

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் தமிழரசனும், உயரம் தாண்டுதலில் சர்வேஷ் அனில் குஷாரேவும் இறுதி சுற்றுக்கு தகுதிபெறத் தவறினர்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் சந்தோஷ் குமார் தமிழரசன் மூன்றவாது ஹீட் பிரிவில் பங்கேற்றார். இதில் பந்தய தூரத்தை சந்தோஷ் குமார் தமிழரசன் 50.46 விநாடிகளில் கடந்து 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த வகையில் சந்தோஷ் குமார் தமிழரசன் வெளியேறினார். ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே தனது மூன்று வாய்ப்புகளில் 2.25 மீட்டர் உயரத்தை தாண்டத் தவறினார். தகுதி சுற்றில் அவரால் 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
இந்த தொடரின் தொடக்க நாளில் 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறத் தவறினார். தொடர்ந்து ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் விகாஷ்சிங், பரம்ஜித் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாய்லி சிங், மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 1,500 மீட்டர் ஓட்டத்தில் அஜய்குமார் சரோஜ் கவனத்தை ஈர்க்க தவறினார். ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், எல்தோஸ் பால், அப்துல்லா அபுபக்கர் ஆகியோரில் ஒருவர் கூட இறுதி சுற்றில் கால்பதிக்கவில்லை.