

டேராடூன்: 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் 106 வயது மூதாட்டியான ராம்பாய். டேராடூனில் நடைபெற்ற 18-வது தேசிய ஓபன் முதியோர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை அவர், படைத்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள கத்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாய். கடந்த 1917-ல் பிறந்தவர். முதியோர் தடகளத்தில் சாதித்து வரும் மான் கவுரை பார்த்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ராம்பாய்க்கு வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விளையாட்டு பயிற்சியை தொடங்கினார்.
கடந்த ஆண்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடகள போட்டியில் ராம் பாய், 45.40 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து மான் கவுரின் சாதனையை தகர்த்தார். மான் கவுர், கடந்த 2017-ல் 101 வயதில் 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 14 விநாடிகளில் கடந்திருந்தார். தற்போது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் ராம் பாய். ஒவ்வொரு பிரிவிலும் 5 முதல் 6 போட்டியாளர்களை சந்தித்து இந்த பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.
தனது 41 வயதான பேத்தி ஷர்மிளா சக்வான் தடகள விளையாட்டில் மூத்த குடிமக்களின் பங்களிப்பு குறித்து சொன்னதன் பேரில், அதில் ஆர்வம் கொண்ட ராம்பாய், 104 வயதில் பயற்சியை தொடங்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில், ராம்பாய் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பங்கேற்ற சுமார் 14 விளையாட்டுப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.