ஐசிசி உலகக் கோப்பை டிராபி பூமியில் இருந்து 1.20 லட்சம் அடி உயரத்தில் வான்வெளியில் அறிமுகம்

வான்வெளியில் உலகக் கோப்பை
வான்வெளியில் உலகக் கோப்பை
Updated on
1 min read

அகமதாபாத்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட தலைசிறந்த 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்தத் தொடருக்கான கோப்பை அறிமுக விழாவை வியக்க வைக்கும் வகையில் நடத்தி உள்ளது ஐசிசி.

டிராபி, பூமியிலிருந்து 1,20,000 அடி உயரத்தில் விண்வெளியில் வைத்து அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனில் இணைக்கப்பட்டு கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து, அந்த கோப்பையானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தரையிறங்கியது. பலூனில் இணைக்கப்பட்ட 4கே கேமராக்கள் இதை பல்வேறு கோணங்களில் படம் எடுத்துள்ளன. இதில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் கோப்பை அமர்ந்திருப்பது போன்ற சில காட்சிகள் பிரம்மிக்க வைப்பதாக இருந்தன.

இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் டிராபி சுற்றுப்பயணத்தை பெரிய அளவில் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன்படி டிராபியின் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது. 18 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக டிராபி கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் இன்று முதல் வரும் ஜூலை 14-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் டிராபி வலம் வரும்.

தொடர்ந்து நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினி, அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், குவைத், பக்ரைன், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு டிராபி பயணம் மேற்கொள்கிறது. இதன் பின்னர் இறுதியாக செப்டம்பர் 4-ம் தேதி டிராபி இந்தியா கொண்டு வரப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in