

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் மின் ஹியுக் காங், சியுங் ஜே சியோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் 9-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய்,முதல் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்செனுடன் மோதினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனோய் 15-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.