

ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு பெரிய தேர் பவனி இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வேளாங்கண்ணியில் நேற்று குவிந்த பக்தர்கள் கூட்டம்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (செப்.7) நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் உலகப் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (செப்.7) இரவு 7 மணிக்கு மேல் நடக்கிறது. முன்னதாக, பேராலய கலையரங்கில் மாலை 5 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டுடன் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறும்.
அதைத்தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வைக்கப்படும் அன்னை சொரூபத்தை ஆயர் சகாயராஜ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர், மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார், சூசையப்பர், உத்திரிய மாதா உள்ளிட்ட 6 தேர்கள் முன்னே செல்ல நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் ஆரோக்கிய அன்னை எழுந்தருளிய பெரிய தேரை தோள்களில் சுமந்து செல்ல உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய முகப்பில் இருந்து தொடங்கும் பெரிய தேர் பவனி, கடற்கரை சாலை, ஆரியநாட்டுத் தெரு, உத்திரிய மாதா தெரு, கடைவீதி வழியாகச் சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். இந்த தேர் பவனியை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தொடர்ந்து, நாளை (செப்.8) ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர், மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. இதையொட்டி, நாகை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர் பவனியையொட்டி, 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.