

திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: கடந்த டிச. 30-ம் தேதி முதல் ஜன. 8-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பக்தர்களின் கூட்டத்தை கண்காணித்து அதற்கு தகுந்தது போல் தரிசன ஏற்பாடுகளை செய்தோம்.
கடந்த ஆண்டு 6.83 லட்சம் பேர் சொர்க்க வாசல் தரிசனம் செய்த நிலையில், இம்முறை 7.38 லட்சம் பேர் சொர்க்க வாசல் தரிசனம் செய்தனர். கடந்த 10 நாட்களில் 182 மணி நேர தரிசன வேளையில், 164 மணி நேரம் சாமானிய பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த 10 நாட்களில் உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 44 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட 10 லட்சம் லட்டுகள் அதிகம். 10 நாட்களில் 33 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.